ஹைதராபாத்தில் நாய் ரத்தம் ஒரு பாட்டில் 25,000 ரூபாய்! விற்றது யார்னு பாருங்க.. ஆடிப்போன தெலுங்கானா
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மனிதநேயமற்ற முறையில் தெருநாய்களை வதைத்து, அவற்றின் ரத்தத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹைதராபாத்தின் ஷேக்பேட் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் கால்நடை மருத்துவமனையில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவர், தெருக்களில் சுற்றித் திரியும் அப்பாவி நாய்களைப் பிடித்து வந்து, முறையான அனுமதியின்றி ரத்த வங்கியை நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தை விலங்குகள் நல ஆர்வலர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள தகவலின்படி, அந்த மருத்துவர் ஹைதராபாத் நகரம் முழுவதும் சுற்றித் திரியும் தெருநாய்களை ரகசியமாகப் பிடித்துச் சென்று தனது மருத்துவமனையில் உள்ள கூண்டுகளில் அடைத்து வைக்கிறார்.

ரத்தம் விற்கும் டாக்டர்
அங்கு அடைக்கப்படும் நாய்களுக்கு முறையான உணவோ அல்லது குடிநீரோ கூட வழங்கப்படுவதில்லை எனத் தெரிகிறது. மிகவும் மோசமான சூழலில் வைக்கப்படும் அந்த நாய்களிடமிருந்து ரத்தம் சட்டவிரோதமாக உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
இப்படி சேகரிக்கப்படும் ரத்தம், ரத்தம் தேவைப்படும் நிலையில் உள்ள விலை உயர்ந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக அந்த டாக்டர் ஒருமுறைக்கு 18,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை மிக அதிக தொகையை வசூலிப்பதாக கூறப்படுகிறது. லாப நோக்கில் செயல்படும் இந்த டாக்டர், எந்தவித லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோதமாக ரத்த வங்கியை நடத்தி வந்துள்ளார்.
கடுமையான ரத்த சோகை
தொடர்ச்சியாகவும், அடிக்கடிவும் ரத்தம் எடுக்கப்படுவதால் அந்த தெருநாய்கள் கடும் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றன. போதிய ஊட்டச்சத்தும், சிகிச்சையும் இல்லாத காரணத்தால் பல நாய்கள் பரிதாபமாக உயிரிழப்பதாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், விலங்குகள் நல ஆர்வலர் மேனகா காந்தியும் இது தொடர்பாக மாநில விலங்குகள் நல வாரியத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
வாயில்லா ஜீவன்
இந்த விவகாரம் ஹைதராபாத் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விலங்குகள் நலத்துறை அமைச்சகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையோ அல்லது பதிலையோ அளிக்கவில்லையாம்.. லாபத்திற்காக வாயில்லா ஜீவன்களை வதைக்கும் இத்தகைய செயல்கள், மருத்துவத் தொழிலுக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
ஆனால் ஒரு டாக்ர இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபடுவது என்பது தொழில் தர்மத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், கடுமையான குற்றமும் ஆகும். அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களாக இருந்தாலும் அவற்றுக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்பதை இந்தச் சமூகம் உணர வேண்டிய தருணம் இது.












Click it and Unblock the Notifications