புரட்சித் தீ மூட்டிய ‘மக்கள் பாடகர்’ கத்தார் காலமானார்.. தனி தெலுங்கானா போராட்டங்களில் முன்னின்றவர்!
ஹைதராபாத்: புரட்சிகர வரிகளால், மக்களிடையே உணர்ச்சிப் பிழம்பை ஏற்படுத்திய பிரபல மேடைப் பாடகர் கத்தார் காலமானார். அவருக்கு வயது 77. மக்கள் பாடகர் எனப் புகழப்பட்ட கத்தார், தனித் தெலுங்கானா போராட்டங்களின் போது பெரும் பங்காற்றினார்.
1949ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மாடி விட்டல் ராவ். இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கத்தார், 1980 காலவாக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று பாடல்கள் பாடி கவனம் ஈர்த்தார்.

சுதந்திர போராட்டத்தின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட கடார் கட்சியின் (Gadar party) மீதான ஈர்ப்பால் தன் பெயரை கத்தார் (Gaddar) என்று மாற்றிக் கொண்டவர் இவர்.
1997ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார் கத்தார். இதில் அவரது முதுகெலும்பில் துப்பாக்கிக் குண்டு ஒன்று சிக்கிக் கொண்டது. அதன் காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். எனினும், தொடர்ச்சியாக தனது குரலால் மக்களை ஈர்த்து வந்தார்.
தனி தெலுங்கானா மாநிலத்துக்கான தனது குரலை வலுவாக முன்வைத்து வந்தவர் கத்தார். தனித் தெலங்கானா போராட்டங்களின் போது பல பாடல்கள் மூலம் மாநிலம் முழுவதும் புரட்சித்தீ மூட்டினார். 2010ஆம் ஆண்டு வரை நக்சல் இயக்கச் சார்பாளராகச் செயல்பட்டு வந்த கத்தார், பின்னாட்களில் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் கத்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, தெலங்கானா ப்ரஜா முன்னணி என்ற இயக்கத்தைத் தொடங்கி போராட்டங்களை முன்னெடுத்தார். தனது பாடல்களின் மூலம் மக்கள் பிரச்சனைகளை அழுத்தமாக பதிவு செய்ததால் 'மக்கள் பாடகர்' என்று அழைக்கப்பட்டார்.

சமீப சில காலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த மக்கள் பாடகர் கத்தார், உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கத்தார் இன்று (ஜூலை 6) உயிரிழந்தார்.
மக்கள் பாடகர் கத்தாரின் மறைவுக்கு காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications