Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை
ஹைதராபாத்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் இந்த வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளது. அதாவது சொத்து வரி கட்டாமல் நிலுவையில் இருந்துள்ளது.

இதையடுத்து வரியை வசூல் செய்ய ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலமுறை ஐதராபாத் மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள பாக்கி தொகையும் ரூ.1.60 கோடியாக உயர்ந்தது.
இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடத்தை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை பறிமுதல் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை கடைசி வழியாக எடுக்கப்பட்டது.
இதற்கு முன் பலமுறை குடும்பத்தினர் மற்றும் சட்டபூர்வ வாரிசுகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், வரி பாக்கியை செலுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால், நடப்பு நிதியாண்டு முடிவடையும் நிலையில், வருவாய் வசூலிக்க கட்டாய அமலாக்க நடவடிக்கையாக இந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது" என்று தெரிவித்தனர். இந்த கட்டிடம் முன்பு சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications