பிஆர்எஸ் பாஜகவுக்கு பி டீம் இல்லை..ராகுல் லீடர் இல்லை, வெறும் ரீடர்! தாறுமாறாக விளாசிய கே.டி.ராமராவ்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ் பாஜகவின் பி-டீம் என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்திற்குத் தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரை இப்போது ஆளும் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதுவரை தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி மட்டும் ஆட்சியில் இருந்துள்ள நிலையில், காங்கிரஸ் இந்த முறை தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ராகுல் காந்தி: இதற்கிடையே ராகுல் காந்தி கடந்த புதன்கிழமை தெலுங்கான மாநிலத்தில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஆளும் பிஆர்எஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், பிஆர்எஸ் என்பது பாஜகவின் பி டீம் என்று சாடினார். மேலும், இரு கட்சிகளுக்கும் இடையே உறவு உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சைத் தெலுங்கானா அமைச்சரும் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிஆர்எஸ் ஒன்றும் பாஜகவின் பீ டீம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தங்கள் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியை சி டீம் அதாவது சோர் டீம் (C- team which stands for Chor team) என அவர் விமர்சித்தார். சோர் டீம் என்றால் இந்தியில் திருடர்கள் அணி என அர்த்தமாகும். மேலும், ராகுல் காந்தி லீடர் இல்லை எனச் சாடிய அவர், ராகுல் காந்தி காங். மூத்த தலைவர்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்கிப்ட்டை படிக்கும் ரீடராக மட்டுமே இருப்பதாகவும் விளாசினார்.
பீ டீம் இல்லை: செய்தியாளர்களிடம் பேசிய கேடி ராமராவ், "நாங்கள் பாஜகவின் பீ டீம் என்று சொல்கிறீர்கள்.. நாங்கள் ஒன்றும் பீ டீம் இல்லை. நீங்கள் தான் சி டீம்... அதாவது சோர் டீம்.. ராகுல் காந்தி ஏன் குஜராத் சட்டசபைத் தேர்தலின் போது குஜராத் செல்லவில்லை.. அவரது பாரத் ஜோடோ யாத்திரை ஏன் மகாராஷ்டிராவில் இருந்து திடீரென ரூட் மாறியதே.. அது ஏன்?
பாஜகவுக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும் புரிதல் என்ன.. மேலும், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி சட்டசபைத் தேர்தலுக்குப் பணம் கொடுத்து கைதானவர் என்பதை யாரும் மறக்க வேண்டாம்" எனச் சாடினார்.
ராகுல் காந்தி மீது அட்டாக்: ரூ. 80,000 கோடி செலவில் கட்டப்பட வேண்டிய நீர்ப்பாசனத் திட்டம் ஒரு லட்சம் கோடியாக அதிகரித்ததாகவும் இதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலளித்த ராமராவ், "ராகுல் காந்திக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரிவதில்லை. அவரது ஸ்கிரிப்ட் ரைட்டர் எழுதி கொடுப்பதை அப்படியே படித்து வருகிறார். பிஆர்எஸ் தெலுங்கானாவிற்கு வெளியே ஒரு தேசிய கட்சியாக விரிவடைவதே பாஜக அல்லது காங்கிரஸ் என இரண்டுமே விரும்பவில்லை.
தெலுங்கானாவில் இரண்டாவது இடம் யாருக்கு என்பதிலேயே காங்கிரஸ் பாஜக இடையே போட்டி நிலவுகிறது. இதற்காக நான் இரு கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை நடந்த தெலுங்கானா தேர்தலில் 105 தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழந்தது அனைவருக்கும் நினைவு இருக்கும்.
அதேபோல தேசியளவில் பாஜகவைக் காங்கிரஸ் கட்சியால் வீழ்த்தவே முடியாது. உபி-இல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோல்வியடைந்தது. இது தேசிய அளவில் பாஜகவைக் காங்கிரஸால் வீழ்த்த முடியாது என்பதைக் காட்டுகிறது " என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications