ஓஹோ.. தெலுங்கானாவில் தோற்ற கையோடு.. "பாஜக வாய்சில்" பேசும் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா!
ஐதராபாத்: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் பல கோடிக்கணக்கான மக்களின் கனவு நனவாவது மகிழ்ச்சி அளிப்பதாக தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா தெரிவித்து உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கிபி 1528 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரால் பாபர் மசூதி கட்டப்பட்டது. 495 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மசூதி அமைந்து இருக்கும் நிலத்தை ராம ஜென்ம பூமி என்று உரிமை கோரி வந்த இந்துத்துவா அமைப்பினர் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தனர். அதை தொடர்ந்து பாபர் மசூதி நில வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துத்துவ அமைப்பினரின் கோரிக்கையின்படி ராமர் கோயிலை கட்ட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து பிரதமர் மோடி கோவிலின் அடிக்கல்லை 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டினார். அதன் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக ராமர் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகளும் அம்மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகிறது என்று தெரிவித்து உள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "அயோத்தியில் ஸ்ரீ சீதாராம சந்திர ஸ்வாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு.
இந்த புனித நேரத்தில், தெலுங்கானாவுடன் சேர்ந்து நாடே இதனை வரவேற்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த பதிவுடன், ராமர் கோயில் கட்டுமானப் பணியின் வீடியோவையும் அவர் பகிர்ந்து உள்ளார். ராமர் கோயிலில் ராமர் சிலை வைக்கப்படும் கருவறை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர ட்ரஸ்ட், அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 12:45 மணிக்குள் ராமர் சிலையை ராமர் கோயிலின் கருவறையில் வைக்க முடிவு செய்துள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளை சேர்ந்த 4,000 பிரபலங்களை அழைத்து உள்ளது. அடுத்த ஆண்டு அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கான வேத சடங்குகள் அடுத்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும். ராமர் கோயிலின் பிரம்மாண்ட கும்பாபிஷேகத்திற்காக உத்தரபிரதேசத்தின் கோயில் நகரமான அயோத்தியில் திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications