கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும்! தெலுங்கானா படுதோல்விக்கு பிறகு கட்சி பெயரை மாற்றும் கேசிஆர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கேசிஆர் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சிக்குள் இப்போது வினோதமான ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.
தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் கேசிஆர் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி மிக மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் நடந்த தேர்தலில் பிஆர்எஸ் கட்சி மொத்தமுள்ள 119 இடங்களில் வெறும் 39ஐ மட்டுமே கைப்பற்றியது.

இதற்கிடையே கே.சி.ஆருக்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது கட்சியின் பெயரை மீண்டும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு அதாவது டிஆர்எஸ் என மாற்றும்படி பலரும் வலியுறுத்துகின்றனர்.
கேசிஆர்: இது குறித்து மூத்த பிஆர்எஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்தக் கட்சி தோற்றுவிக்கப்பட்டதே தெலுங்கானா முழக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான். அப்படி இருக்கும் போது தெலுங்கானா கட்சி பெயரிலேயே இல்லை என்றால் எப்படி.. உண்மையான தெலுங்கானா அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே கட்சி பெயரை பிஆர்எஸ் என்பதில் இருந்து மீண்டும் டிஆர்எஸ் என மாற்றுமாறு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
சட்டசபைத் தேர்தலில் எங்கே தோல்வி அடைந்தோம் என்பது குறித்து ஆய்வு செய்ய கேசிஆர் மகனும் பிஆர்எஸ் செயல் தலைவருமான கே.டி.ராமராவ் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.ஹரீஷ் ராவ் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிலும் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளனர்.
டிஆர்எஸ்: இது குறித்து முன்னாள் அமைச்சர் கடியம் ஸ்ரீஹரி கூறுகையில், "ஆம், கட்சியின் பெயரை மீண்டும் டிஆர்எஸ் என மாற்ற வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சித் தலைவர்களிடம் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா பிரச்சினைகளை எங்களால் மட்டுமே பேச முடியும். கடந்த 23 ஆண்டுகளாகவே நாங்கள் தான் பேசி வருகிறோம்" என்றார்.
டிஆர்எஸ் கட்சி தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அப்படியிருக்கும் போது டிஆர்எஸ் பெயரை பிஆர்எஸ் என மாற்றியதன் மூலம் அது தெலுங்கானாவில் இருந்து அந்நியப்பட்டுவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
என்ன காரணம்: கேசிஆர் தன்னை தேசிய தலைவராக முன்னிறுத்தவே பிஆர்எஸ் என்று தனது கட்சிக்குப் பெயரை மாற்றினார். தன் மூலம் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்த அவர் விரும்பினார். ஆனால், இது அவரது சொந்த மாநிலத்திலேயே அவருக்கு பெரும் அடியைப் பெற்றுத் தந்துவிட்டது.
பிஆர்எஸ் எப்போது தன்னை ஒரு தேசிய கட்சியாகக் காட்டிக் கொள்ள ஆரம்பித்ததோ அப்போதே தெலுங்கானா உடனான தொடர்பை இழந்துவிட்டதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். எனவே, கேசிஆர் மீண்டும் கட்சி பெயரை மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றே அவரது கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தேர்தல் வல்லுநர்கள் சொல்வது என்ன: இது குறித்து அரசியல் விமர்சகர் ஏ ஜாகிர் கூறுகையில், "பிஆர்எஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது வரலாற்றுத் தவறு.. கே.சி.ஆர் தெலுங்கானாவிற்குத் தேவையானது செய்துவிட்டார்.. அடுத்து தேசிய அரசியலுக்குச் செல்கிறார் என்பது என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றனர்.
கடந்த 2014இல் தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதில் கணிசமான பங்கு வகித்ததால் தெலுங்கானா மக்கள் தனது தெலுங்கானா அடையாளத்தின் காரணமாகவே வாக்களித்தனர் என்பதை கேசிஆர் உணரவில்லை. அவர் தெலுங்கானா மக்களைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார். குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவிகளைக் கொடுத்தார், ஊழல் புகார்களைக் கண்டுகொள்ளவில்லை. என்ன நடந்தாலும் மக்கள் தனக்காகவே வாக்களிப்பார்கள் என நினைத்தார்.
கேசிஆரை பொதுமக்கள் தெலுங்கானாவின் தந்தை என்று அழைத்தார்கள்.. இப்போது தேசத்தின் தலைவராக உருவாக விரும்பினார். ஆனால், மக்கள் அவருக்கு அவரது பாடம் புகட்டிவிட்டனர். செய்த தவறை உணர்ந்து அவர் மீண்டும் தெலுங்கானாவில் கட்சியைக் கட்டி எழுப்புவது நல்லது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications