"யூஸ்லெஸ்".. விடாமல் மோதும் கேசிஆர்.. நிதி ஆயோக்கை புறக்கணித்து பிரதமருக்கு காட்டமான கடிதம்
ஹைதராபாத்: நிதி ஆயோக் கூட்டம் என்பதே உதவாத ஒன்று என்றும் மாநிலங்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணித்துவிட்டு நடத்தும் இந்த கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் 7ஆவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக காணொலி மூலம் இந்த கூட்டம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு இந்த கூட்டம் நேரடியாக நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்வர்.

வேளாண் துறை
இந்த கூட்டத்தில் வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் என்பதால் இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்கிறார்.

நிதி ஆயோக் கூட்டம்
இந்த நிலையில் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காட்டமான கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பண வீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விண்ணை முட்டும் விலைவாசி, உயரும் வேலைவாய்ப்பின்மை, குறைந்த பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத பிரச்சினைகளை இந்த நாடு சந்தித்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சி குறித்து எந்த திட்டமிடலும் இல்லை. கூட்டாட்சியின் உணர்வும் இல்லை. மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு தடை விதிக்காதீர்கள். மாநிலங்களின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் தேச நலனுக்கானது. நிதி ஆயோக் உருவானதன் நோக்கமே வலுவான மாநிலங்களால் வலுவான நாட்டை உருவாக்குவது.

திட்டக்குழு
திட்டக்குழு இருந்த போது மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மதிப்பிருந்தது. ஆனால் நிதி ஆயோக்கில் மாநில அரசுகளிடம் கருத்துகளை கேட்பதே இல்லை. வரி விதிப்பின் போது கூட மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை. எனவே நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.

3 முறை பிரதமரை தவிர்த்த முதல்வர் கேசிஆர்
கடந்த 3 முறை தெலுங்கானாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த போது தெலுங்கானா முதல்வர் அவரை வரவேற்க செல்லவில்லை. அது போல் ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் கூட முதல்வர் கேசிஆர் பங்கேற்கவில்லை. இவ்வாறு கேசிஆர், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications