அள்ளு அள்ளு! போலீஸ் இருக்காங்கன்னு கூட பார்க்கலயே.. மது பாட்டிலை போட்டி போட்டு அள்ளிய மதுபிரியர்கள்
ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே, வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை போலீசார் அழிக்க முயற்சித்த போது அவற்றை மதுபிரியர்கள், போலீசார் கண்முன்னே போட்டி போட்டு அள்ளிச்சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மது பாட்டில்கள் மற்றும் வழக்குகளில் தொடர்புடைய மது பாட்டில்களை கைப்பற்றும் போலீசார், அவற்றை மொத்தமாக அழிப்பது வழக்கம். மொத்தமாக மதுபாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்து அதை ஜேசிபி போன்ற வாகனங்களை வைத்து போலீசார் மொத்தமாக அழிப்பதை பார்த்து இருப்போம்.

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவுவதை காண முடியும். அந்த வகையில், ஆந்திராவில், போலீசார் சட்ட விரோத மது பாட்டில்களை அழிக்க முயற்சித்துள்ளார்கள். அப்போது, இதை மோப்பம் பிடித்த மது பிரியர்கள்.. வீணாக மதுவை அழிக்கிறார்களே என கவலையுடன்.. போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கு 4, 5 மது பாட்டில்களை அள்ளி சென்றுள்ளனர்.
கையில் அகப்பட்ட பாட்டில்களை அள்ளிக்கொண்டு நாலாபுறமும் ஓடினர். ஜேசிபியின் முன்பக்க தொட்டியை வைத்து மதுபாட்டில்களை போலீசார் அழிக்க முயன்றனர். ஆனால் அந்த தொட்டி கீழே இறங்கும் 3 நொடிகளில் மதுபாட்டிகல்களை அவர்கள் அள்ளி சென்றனர். அந்த இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை அழிக்க போலீசார் முடிவு செய்தனர். ரூ.50 லட்சம் மதிப்பு கொண்ட இந்த மது பாட்டில்களை மொத்தமாக அழிப்பதற்காக குண்டூர் மாவட்டம் எடுகுரு சாலையில் ஏற்பாடுகள் நடைபெற்றது. அதன்படி, நூற்றுக்கணக்கான மது பாட்டில்களை மொத்தமாக அடுக்கி வைத்த போலீசார், அவற்றை ஜேசிபி எந்திரம் கொண்டு அழிக்க தயாராக இருந்தனர்.
அப்போது அங்கு வேடிக்கை பார்க்க வந்த சில மதுபிரியர்கள்.. திடீரென மது பாட்டில்களை தூக்கி கொண்டு ஓடினர். கையில் கிடைத்த மதுபாட்டில்களுடன் மின்னல் வேகத்தில் மது பிரியர்கள் பாய்ந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சிலரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து உஷாரான போலீசார், அங்கிருந்தவர்களை விரட்டிவிட்டு மதுபாட்டில்களை அழித்தனர்.
மது பாட்டில்களை அள்ளிக்கொண்டு மது பிரியர்கள் ஓட்டம் எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து போலீசார் கூறுகையில், "வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
என்னதான் போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் மனதில் மாற்றம் வராத வரை முழுமையாக மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். அதேபோல மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'இது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னால் சாதாரண மக்களை அங்கு போலீசார் அனுமதிப்பது ஏன்?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இன்னும் சில நெட்டிசன்களோ தங்களுக்கே உரிய பாணியில் ஜாலியாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications