சோதனை மேல் சோதனை.. தாய் இறந்து 48 நாளில் தந்தையை இழந்த நடிகர் மகேஷ் பாபு! சகோதரரும் இறந்த சோகம்
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்த ஒரே ஆண்டில் அடுத்தடுத்து தனது தாய், தந்தை, சகோதரரை இழந்து இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
தெலுங்கில் இவர் நடித்த தமிழ் டப்பிங் படங்கள் கூட ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்களை கொண்டு இருக்கிறார் மகேஷ் பாபு.

நடிகர் கிருஷ்ணா
இன்றைய சினிமாவில் மகேஷ் பாபு இருக்கும் இடத்தில் முந்தைய தலைமுறைக்கு இருந்தவர் அவரது தந்தை கிருஷ்ணா. தெலுங்கு திரையுலகின் அப்போதைய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த அவர், பல்வேறு மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர்.

காங்கிரஸ் எம்பி
இந்தியாவின் கவுரவம் மிக்க விருதிகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது பெற்ற இவர், அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிருஷ்ணா, கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.

உடல்நலக்குறைவு
இந்த நிலையில் நேற்று நடிகர் கிருஷ்ணா தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது அவரது குடும்பத்தினர் மீட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுயநினைவின்றி இருந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் சுமார் 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளித்தனர்.

தீவிர சிகிச்சை
மீண்டும் சுயநினைவுக்கு திரும்பிய நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் உயர்ரக தீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே தகவல் வெளியானது. நடிகர் கிருஷ்ணாவை பரிசோதித்த மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.

உடல்நிலை மோசம்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இருந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மரணம்
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் கிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கிருஷ்ணா மறைவால் தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரை பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்தடுத்து சோகம்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகனும், மகேஷ் பாபுவின் சகோதரருமான ரமேஷ் பாபு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் குடும்பமே உடைந்துபோய் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி வயது மூப்பு காரணமாக காலமானார். சகோதரர், தாயை ஒரே ஆண்டில் இழந்து வாடிய மகேஷ் பாபு தற்போது தந்தையையும் இழந்து உள்ளார்.












Click it and Unblock the Notifications