திருப்பதி ஏழுமலையான் கோவில்.. தேவஸ்தான அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு வாக்குவாதம்.. என்ன நடந்தது?
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான அதிகாரிகளுடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை கோவிலுக்குள் அனுமதிக்க வலியுறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனி வார ஆஸ்தானம் இன்று நடக்கிறது. திருப்பதி ஆனிவார ஆஸ்தானத்திற்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து மங்கல பொருட்கள் சென்றன. மங்கல பொருட்களுடன் செல்ல தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

எனினும், தமிழக அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனுக்கு பாஸ் இருப்பதால் கோவிலுக்குள் அனுமதிக்க சேகர் பாபு வாக்கு வாதம் செய்தார். இணை ஆணையர் மாரியப்பனை அனுமதிக்காமல் உள்ளே செல்ல மாட்டேன் என என அமைச்சர் சேகர் பாபு வாக்கு வாதம் செய்தார். சேகர் பாபு வலியுறுத்தலை அடுத்து அதிகாரி மாரியப்பன் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் எனப்படும் விழா ஆனி மாதம் கடைசி நாளில் பாரம்பரியமாக நடைபெறும். 1956 ஆம் ஆண்டுக்கு பின்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோவில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.
சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவிலில் ஆனி கடைசி நாளில் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1 ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆனி வார ஆஸ்தான தினம் இன்று நடைபெற்றது. ஆஸ்தான தினத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications