2 சம்பவம்.. மகளை கூட விடலையே.. மோடியை எதிர்க்கும் புதிய "தலை".. தெற்கில் உருவான "கவிதா" புயல்!
ஹைதராபாத்: தேசிய அளவில் பிரதமர் மோடியை பல்வேறு தலைவர்கள் எதிர்த்து வரும் நிலையில் முக்கியமாக ஒரு அரசியல் தலைவரை தற்போது பாஜகவும் வெளிப்படையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
தேசிய அளவில் பாஜகவை காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ( தற்போது பாரதிய ராஷ்டிரிய சமிதி) போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. முக்கியமாக டிஆர்எஸ் கட்சியின் கே சந்திரசேகர ராவிற்கும் - மோடிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றியே தீருவேன் என்று கேசிஆர் தீவிரமாக அரசியல் பணிகளை செய்து வருகிறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியை தொலைநோக்கு பார்வை இல்லாதவர் என்றும், பாஜகவை கடலில் தூக்கி வீச வேண்டும் என்றும் சந்திசேகர ராவ் சமீபத்தில் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படவில்லை..அண்ணாமலைக்கு டிஜிபி பதிலடி
வரவேற்கவில்லை
அதேபோல் பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். மேலும் தெலுங்கானாவிற்கு சமீபத்தில் ராமானுஜர் சிலையையே திறக்க வந்த பிரதமர் மோடியை சந்திசேகர ராவ் விமான நிலையத்தில் வரவேற்காமல் தவிர்த்தார். இவர்களுக்கு இடையிலான மோதல் அரசியல் தாண்டி பர்சனல் வெறுப்பாகவே மாறி உள்ளது. அதனால்தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற கட்சி பாரதிய ராஷ்டிரிய சமிதி.. அதாவது டிஆர்எஸ் தற்போது பிஆர்எஸ் என்று மாறி உள்ளது. பாஜக - பிஆர்எஸ் இடையிலான மோதல் தற்போது புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்னொரு பக்கம் தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது
மோதல்
முழுகு மாவட்டத்தில் நடந்த சமக்கா சரலக்கா விழாவில் தமிழிசை கலந்து கொள்ள சென்றார். அவரை அழைக்க அங்கு அமைச்சர்கள் யாரும் வரவில்லை. எம்எல்ஏக்கள் வரவில்லை. ஆட்சியர் கூட வரவில்லை. ஏன் எஸ்பி கூட வரவில்லை. அந்த அளவிற்கு ஆளுநர் தமிழிசை செல்லும் இடங்களில் எல்லாம் சந்திரசேகர ராவ் அவரை அவமானப்படுத்துகிறார். இந்த மோதல் சமீபத்தில் ஆபரேஷன் கமலம் போது முற்றியது. சமீபத்தில் மூனுகோட் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி பிஆர்எஸ் கட்சி வென்றது. இந்த இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதற்கு இடையில்தான் முதல்வர் சந்திரசேகர ராவ் முக்கியமான வீடியோ ஒன்றை நேற்று செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்தார்.
புகார் என்ன?
தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கூறி அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏக்களை பாஜகவிற்கு தாவ சொல்லி பேரம் நடந்ததாக கூறி, இந்த வீடியோவையோ சந்திரசேகர ராவ் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் ராமச்சந்திர பாரதி, சிம்ஹாஜி மற்றும் நந்த குமார் என்ற மூன்று நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்க பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அவர் அளித்த பேட்டியில், தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க இவர்கள் திட்டம் போடுகிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளது. கையும், களவுமாக அவர்கள் சிக்கிவிட்டனர் என்று கேசிஆர் குறிப்பிட்டு உள்ளார். அதோடு பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ்தான் இதற்கு பின்னணியில் இருப்பதாக கே சி ஆர் கூறியுள்ளார்.
எஸ்ஐடி
இந்த வீடியோக்களை பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு அனுப்புவேன். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு அனுப்புவேன். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்புவேன். தேர்தல் ஆணையத்திற்கு இந்த வீடியோவை அனுப்புவேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்க இவர்கள் மோசமாக திட்டம் போடுகிறார்கள், என்றும் கேசிஆர் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ முயன்ற போது சிபிஐக்கான அனுமதியை கேசிஆர் வாபஸ் பெற்றார். அதோடு எஸ்ஐடி அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ்தான் தெலுங்கானா அரசை கவிழ்க்க சதி திட்டம் போட்டதாக எஸ்ஐடி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேரடியாக பாஜக - பிஆர்எஸ் மோதலாக இது உருவெடுத்து உள்ளது,.
வழக்கு
இந்த நிலையில்தான் சமீபத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை வைத்தது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசின் அமைச்சர் மணீஷ் சிசோடியா உத்தரவின் பெயரில், புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, டெல்லி பல்வேறு மதுபான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிசோடியா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் பல மதுபான நிறுவன தலைவர்கள் கைதான் நிலையில், இதில் சவுத் கார்ட்டல் குரூப் என்ற நிறுவனத்திற்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிற்கு எதிராக அமலாக்கத்துறை ரிப்போர்ட் பதிவு செய்துள்ளது. அவரின் பெயரை இதில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரே வழக்கு மூலம் ஆம் ஆத்மியை மட்டுமின்றி கேசியாரையும் எதிர்க்க பாஜக முடிவு செய்துவிட்டதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தேசிய அளவில் கேசிஆர் - மோடி என்ற மோதல் தொடங்கி உள்ளது.