நாங்கள் வங்கியை கொள்ளையடித்தோம்.. ஆனா நீங்க? மோடிக்கு எதிராக ஹைதராபாத்தில் "மணி ஹெய்ஸ்ட்" கட் அவுட்!
ஹைதராபாத்: பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வரும் சூழலில், அவருக்கு எதிராக மனி ஹெய்ஸ்ட் ஸ்டைலில் வைக்கப்பட்ட கட் அவுட் போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறை வரும் போதும், #GoBackModi என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டும், கோ பேக் மோடி என்று ட்விட்டரில் பதிவிட்டும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது அதிமுகவின் ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
திமுக அரசை கண்டித்து.. ஜூலை 5இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்! தமிழக பாஜக அறிவிப்பு
பாஜக செயற்குழு கூட்டம்
தற்போது திமுகவின் செயல்கள் தெலங்கானாவுக்கும் பரவியுள்ளது. பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் ஜூலை 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக ஆட்சிபுரியும் 18 மாநிலங்களின் முதல்வர்கள், அனைத்து மாநில பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என சுமார் 300 முதல் 400 பேர் வரை கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக பைய் பைய் மோடி, கோ பேக் மோடி என ஏராளமான போஸ்டர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹை டெக் சிட்டி, பஞ்சாரா ஹில்ஸ், லக்கடிக்காபூல், நாம்பல்லி உள்ளிட்ட பகுதிகள் கடுமையான வாசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
போலீஸ் அகற்றம்
அதில் விவசாயிகள் போராட்டம், அக்னிபாத் திட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை, கொரோனா சூழல் ஆகிய பிரச்னைகளை முன்வைத்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் அவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இணையத்தில் பகிரப்படும் பேனர்
இந்த நிலையில் , தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிர்வாகி சதீஷ் ரெட்டி என்பவர் ட்விட்டரில் பிரதமர் மோடி எதிராக வைக்கப்பட்ட பேனர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எல்பி நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த மனி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் கதாபாத்திரத்துடன், நாங்கள் வங்கிகளை தான் கொள்ளையடிப்போம். ஆனால், நீங்கள் நாட்டையே கொள்ளையடிக்கிறீர்கள் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.