பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதி.. அப்போலோவில் தீவிர பரிசோதனை.. என்ன காரணம்?
ஹைதராபாத்: நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த பவன் கல்யாண் தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் திடீரென்று பவன் கல்யாண் உடல்நல பிரச்சனை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் தற்போது தெலுங்கு தேசம் + ஜனசேனா + பாஜக கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் துணை முதல்வர் பவன் கல்யாண் திடீரென்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
அதாவது நேற்று இரவு திடீரென்று ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பவன் கல்யாண் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பவன் கல்யாணுக்கு ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் பவன் கல்யாண் வெறும் மருத்துவ பரிசோதனைக்கு மட்டுமே நேற்று மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
மாறாக திடீர் உடல் நல பிரச்சனையால் தான் அவர் மருத்துவமனை சென்று இருப்பதாகவும், அதன்பிறகே மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பவன் கல்யாண் நீண்ட காலமாக முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதற்கு அவ்வப்போது சிகிச்சைகள் எடுத்து கொள்கிறார். ஆனாலும் அவருக்கு முதுகு வலி மட்டும் இன்னும் முழுவதுமாக சரியாகவில்லை. இப்படியான சூழலில் தான் கடந்த சில நாட்களாக அவருக்கு முதுகுவலி அதிகரித்த நிலையில் அவர் மருத்துமவனைக்கு சென்று இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பரிசோதனையின்போது பவன் கல்யாணை சில வாரங்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாத இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மீண்டும் அடுத்தக்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாளை ஆந்திராவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
பவன் கல்யாண் சமீபத்தில் தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார். அதன்பிறகு டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications