ஆணவம்.. நீங்க தர்மம் செய்யலியே.. ரேஷனில் மோடி படம் எதுக்கு? நிர்மலா சீதாராமனை விளாசிய பிரகாஷ் ராஜ்
ஐதராபாத்: ரேஷன் கடையில் பிரதமர் மோடி போட்டோ வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ‛‛இந்த ஆணவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது'' எனக்கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தெலுங்கான மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று 2வது நாளாக இன்று பாஜக நாடாளுமன்ற பிரவாஸ் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி மாவட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் சென்றார்.
அப்போது அவர் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரேஷன் பொருட்களில் மத்திய அரசின் பங்கு என்பது பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறினார்.

மோடி படம் எங்கே?
அப்போது காமரெட்டி மாவட்டம் பான்ஸ்டா அருகே பீர்கூரில் உள்ள ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லை. இதனால் அவர் கோபமடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இல்லை? என அவர் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் பதிலளிக்கவில்லை. மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1 க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுகிறது. இதில் பெரும்பங்கை மத்திய அரசு வகிக்கிறது. இப்படி இருக்கும்போது பிரதமரின் படத்தை வைக்க உங்களுக்கு ஏன் ஆட்சேபனை?'' என கேள்வி எழுப்பினார்.

கலெக்டரை வறுத்த நிர்மலா சீதாராமன்
இதனால் காமரெட்டி மாவட்ட கலெக்டரரை ஜிதேஷ் பாட்டீலை அழைத்த நிர்மலா சீதாராமன், ‛‛ரேஷன் அரசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் நிர்மலா சீதாராமன் கோபத்தை கொப்பளிக்கும் வகையில் அரை மணி நேரத்தில் இதுதொடர்பான விபரங்களை அறிந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சியினர் கண்டனம்
நிர்மலா சீதாராமனின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரேஷன் பொருட்களின் மத்திய அரசின் பங்கு என்ன? என்பது பற்றி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்ததாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் தான் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கானாவை ஆட்சி செய்யும் தெலுங்கான ராஷ்ட்ரிய சமீதி மற்றும் எதிர்க்கட்சிகளாக காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரகாஷ் ராஜ் விமர்சனம்
இந்நிலையில் தான் இந்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டரில், ‛‛இந்த ஆணவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களின் வரிப்பணம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அதோடு நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். நீங்கள் யாருக்கும் தர்மம் செய்யவில்லை. சரியாக நடந்து கொள்ளுங்கள்'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications