"ஆவேச" சந்திரசேகர ராவுக்கு.. போன் போட்ட பிரதமர் மோடி.. ஹேப்பி பர்த்டே வாழ்த்து
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகரராவின் பிறந்தநாளான இன்று(பிப்.,17) நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா 2014ல் புதிய மாநிலமாக உருவானது. தனி மாநில போராட்டத்தை முன்னெடுத்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திர சேகரராவ் (கேசிஆர்) 2வது முறையாக முதல்வராக உள்ளார்.

விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாஜக அரசுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில், சமீபத்தில் கடுமையாக விமர்சிக்கிறார். ‛பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்து ஊற்றெடுக்கிறது. மத்தியில் நரேந்திர மோடியின் அரசை விரட்ட லோக்சபா தேர்தலில் களம் இறங்குவேன். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட தகவல் மட்டுமே'' என விமர்சித்தார்.

3வது அணிக்கு முயற்சி
இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகாவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் பாஜக கூட்டணியில் இல்லாத பிற மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களுடன் சந்திரசேகரராவ் நெருக்கம் காட்டி வருகிறார். விரைவில் அவர்களை தனித்தனியே சந்திக்க உள்ளார். தேசிய அளவில் 3ம் கூட்டணியை உருவாக்கி 2024ல் பிரதமராக சந்திரசேகர ராவ் முயற்சிக்கிறார் எனவும், அடுத்த ஆண்டில் தெலுங்கானாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜகவை கட்டுப்படுத்த இப்போதே திட்டமிட்டு செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.

மோடி வாழ்த்து
இந்நிலையில் இன்று சந்திரசேகரராவுக்கு 68வது பிறந்தநாள். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். சந்திரசேகர் ராவை தொலைபேசியில் அழைத்த பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதற்கு சந்திரசேகரராவ் நன்றி தெரிவித்தார். இதுதவிர இருவரும் வேறு ஒன்றும் பேசிக்கொள்ளவிலல்லை என முதல்வர் அலுவலகத்தில் இருப்போர் கூறினர்.

டுவிட்டரிலும்...
மேலும் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛தெலுங்கானா முதல்வர் கேசிஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நலமாக, நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தில் பிப்.5ல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை திறப்பு விழாவை சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். தெலுங்கானா மாநிலத்துக்கு வளர்ச்சி திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டி அவர் பங்கேற்காத நிலையில் தற்போது இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்பட பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications