நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்து..கைது செய்யப்பட்ட தெலுங்கானா எம்எல்ஏ ஜாமீனில் விடுதலை
ஹைதராபாத்: முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக கைது செய்யப்பட்ட தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும் எனவும் பாஜக உயர்மட்ட குழு உத்தரவிட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிராக, தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் திங்கட்கிழமை இரவு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோஷாமஹால் தொகுதி எம்எல்ஏவான ராஜா சிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்திய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூக்கியைத் தாக்கிப் பேசும்போது இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை ரத்து செய்ய சுமார் 50 ஆதரவாளர்களுடன் சென்றபோது காவல்துறையினர் அவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். அதன்பின்னர் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.
நபிகள் நாயகத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்று கூறி, அதை நகைச்சுவை வீடியோ என்று அவர் கூற முயன்றாலும், முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோவை ராஜா சிங் வெளியிட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று இரவு ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் நகரின் பிற பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
ராஜா சிங் இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அவரை உடனடியாக கைது செய்யுமாறும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் சாய் சைதன்யா தெரிவித்தார்.
கோஷாமஹால் எம்.எல்.ஏ.வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து, பாஜகவின் மத்திய ஒழுங்குக் குழுவின் உறுப்பினர் செயலர் ஓம் பதக், "பாஜகவின் அரசியலமைப்பு விதி XXV 10 (a) விதியை மீறும் பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மேலும் உங்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியில் இருந்தும், உங்கள் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எம்எல்ஏ ராஜா சிங் அளித்த விளக்கத்தில், நான் எந்த குறிப்பிட்ட சமூகத்தின் பெயரையும் கூறவில்லை. எந்த அடிப்படையில் காவல்துறை என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது என்பது எனக்கு புரியவில்லை. எனது வீடியோ ஃபாருக்கியை இலக்காகக் கொண்டது, நான் எனது வார்த்தைகளில் உறுதியாக நிற்கிறேன், யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தவில்லை. இது வீடியோவின் முதல் பகுதி, இரண்டாவது வீடியோவும் இருக்கும். அதையும் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே எம்எல்ஏ ராஜா சிங் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications