யாத்திரையில் திடீரென ஒடிய ராகுல் காந்தி.. உற்சாகமடைந்த தொண்டர்கள்! களைக்கட்டும் 'ஒற்றுமை யாத்திரை'
ஹைதராபாத்: தேச ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தெலங்கானாவின் கொல்லப்பள்ளியில் சிறிய அளவில் மரத்தான் ஓடியுள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இப்பயணத்தை ராகுல் தொடங்கியுள்ளார்.
இந்த பயணம் 50 நாட்களை கடந்துள்ள நிலையில், தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர் மிகக் குறைந்த தூரம் தொண்டர்களுடன் ஓடியுள்ளார்.
கழுத்தில் ஆட்டுக்குட்டி.. தலையில் கொம்பு! ஃபன் பண்ணும் ராகுல் காந்தி - அட இது அண்ணாமலை போஸ் ஆச்சே
காங்கிரஸ்
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு விலகினர். அவர்கள் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லையென்றும், ராகுல் காந்தி மீதும் கடும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர். இதையெல்லாம் கட்சி பெரியதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் அதன் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் விலகியது பரபரப்பாக பேசப்பட்டது. எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்தது.
தெலங்கானா
இதனையடுத்து கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணத்தை அவர் தொடங்கினார். செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தற்போது 53து நாளை எட்டியுள்ளது. இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என 4 மாநிலங்கள் 18 மாவட்டங்கள் என 1,230 கி.மீ வரை யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இதனையடுத்து கடந்த 23ம் தேதி தெலங்கானாவின் மஹபூப் நகர் குடிபெல்லாவை வந்தடைந்தார்.
நடனம்/மினி மரத்தான்
தெலங்கானாவில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நேற்று (அக்.29) பத்ராசலத்தில் நடைப்பயணத்தின்போது பழங்குடியின மக்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து 'கொம்மு கோயா' நடனமாடினார். இதில், பழங்குடியினர் வழங்கிய பாரம்பரிய தலைக் கவசத்தை அணிந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இந்நிலையில் இன்று கொல்லப்பள்ளியில் அதிகாலையில் நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் சிறிய அளவில் மரத்தான் நடத்தி அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
கட்சியின் நிலை
கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, அதற்கு முன்னரும் தோல்வி, கட்சியின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா என தொடர்ந்து சறுக்கிய காங்கிரஸ் கட்சி எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருபுறம் பாஜக பெரும் சவாலாக இருந்தாலும், மறுபுறத்தில் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் காங்கிரஸ் இடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கின்றன. இதற்கு உதரணம்தான் பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள். எனவே கட்சியை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் நின்றுகொண்டிருக்கிறது. இதனை சாத்தியப்படுத்த ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள முயற்சிகள் பலனளிக்குமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.