குக்கூ, குக்கூ.. அண்ணாத்த படத்துல நடிக்கும் ரஜினிக்கு.. குக்கூ, குக்கூ.. அரசியல் அறிக்கை பம்மாத்து!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் பங்கெடுத்துள்ளார்.
இதற்காக தனி விமானம் மூலமாக ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று சேர்ந்துள்ளார். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கக்கூடிய புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், மீனா, சூரி உள்ளிட்ட பலரும் இதில் நடித்து வருகிறார்கள்.

சிகிச்சை பெற்ற ரஜினி
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பிறகு சென்னை திரும்பினார்.

உடல்நிலை காரணம்
சென்னை திரும்பிய பிறகு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த சட்டசபை தேர்தலில் களமிறங்கப் போவதாக அதுவரை தெரிவித்து வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தார். இதற்கு காரணமாக உடல் நிலையைச் சுட்டிக் காட்டினார்.

பல்டியடித்த ரஜினி
கொரோனா நோய் பரவல் தாக்கம் அதிகமாக இருப்பதால், தன்னால் பிரச்சாரத்துக்கு அலைய முடியாது, எனவே அரசியலுக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தார். வெகு காலமாக அரசியல் டயலாக்குகள் பேசி வெளிப்படையாக அரசியல் பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகர்களை உசுப்பேற்றி வைத்திருந்தார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்துவிட்டார். ஆனால், திடீரென அவர் இப்படி பல்டி அடித்தது பல ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக மாறியது.

ஓட்டுப் பதிவு முடிஞ்சாச்சுல்ல
அதே நேரம், ரஜினிகாந்த் உடல் நிலையை மனதில் வைத்து, அவர், ஓய்வு எடுத்தால் போதும், உடல்நிலை சரியாக இருந்தால் போதும் என்று மனதை தேற்றிக் கொண்டனர் அந்த ரசிகர்கள். ஆனால் இப்போது அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் பறந்துள்ளார் ரஜினிகாந்த். சரியாக வாக்குப்பதிவு முடிந்து சில நாட்களுக்குப் பிறகு அவர் பழையபடி சூட்டிங்கில் பங்கெடுத்துள்ளார் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.

எப்படி "ராஜதந்திரம்"
அரசியல் பரபரப்புகள் உச்சத்தில் இருந்தபோது அவர் பழையபடி ஷூட்டிங் சென்று இருந்தால்.. அரசியலுக்கு வருவதற்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு சூட்டிங்கில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார் என்றும்.. இப்போது நோய் பரவல் ஏற்படாதா என்றும் கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து விடுவார்கள். எனவே அதை லாவகமாக தவிர்த்துவிட்டு தேர்தல் அலை ஓய்ந்த பிறகு நைஸாக ஹைதராபாத் சென்றுள்ளார் ரஜினிகாந்த் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் சில ரசிகர்கள்.

ஏன் அரசியலுக்கு வரவில்லை
நான்கு பொதுக்கூட்டங்கள், 10 இடங்களில் வேனில் நின்றபடி பேசி இருந்தால் கூட போதும் அரசியலில் கால் வைத்து இருக்கலாம், தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம் ரஜினி. ஏனெனில், ரஜினி மக்கள் மன்றம் அந்த அளவுக்கு பல ஊர்களில் கட்டமைப்பு வசதியை கொண்டு இருக்கிறது. எழுச்சியை ஏற்படுத்தப்போகிறேன் பார் என்று பல ரசிகர்கள் பல மாதங்களாக கிராமங்களில் கட்சி வேலையும் பார்த்தனர். ஆனால் இதற்கு கூட உடல்நிலை ஒத்துழைக்காது என்று கூறிய ரஜினிகாந்த், தற்போது பாட்டு, ஃபைட் என அடங்கியிருக்கும் ஒரு மசாலா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ரிஸ்க் எடுக்கலாமா
அரசியல் கூட்டங்களிலாவது முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து பிரச்சாரம் செய்திருக்க முடியும். சினிமா சூட்டிங்கில் அதுவும் முடியாது. மேக்கப் போடுவதில் ஆரம்பித்து, நெருக்கமான காட்சிகள் வரை பல்வேறு கலைஞர்களுடன் மிக மிக நெருக்கத்தில் இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. எந்த ஒரு நடிகராக இருந்தாலும் இப்படித்தான் ஷூட்டிங் நடக்கும். உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறிய ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதை விட்டுவிட்டு இப்படி கொரோனா காலத்தில் ரிஸ்க் எடுத்து ஷூட்டிங் செல்லலாமா என்பது ரஜினி ரசிகர்கள் கேள்வியாக இருக்கிறது.

உடல்நிலை முக்கியம்
கடந்த டிசம்பர் மாதத்தை விடவும் இப்போதுதான் கொரோனா நோய் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் கூட கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அப்போது ஷூட்டிங் செல்லாமல் அப்போது அரசியலுக்கும் வராமல், நோய் பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் அவர் சென்றுள்ளார். எனவே இது அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக தாமதித்து எடுக்கப்பட்ட முடிவு தான் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் சில ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications