பாகுபலி, புஷ்பா படங்கள் தயாரிக்கப்பட்ட.. பிலிம் சிட்டி உரிமையாளர் ராமோஜி ராவ் காலமானார்
ஹைதராபாத்: 'ஈ நாடு' ஊடக நிறுவனரும், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியை உருவாக்கியவருமான பெரும் தொழிலதிபருமான ராமோஜி ராவ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.
ஆந்திராவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான செருகூரி ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். கடந்த 5 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக நானக்ராம்குடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராமோஜி ராவ் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ராமோஜி ராவ், சினிமாத்துறையின் மிகப்பெரிய பிலிம் சிட்டியான ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் உரிமையாளர் ஆவார். ஈநாடு நியூஸ் பேப்பர், ஈ டிவி நெட்வொர்க் ஊடகத்துறையிலும் மிகப்பெரும் ஜாம்பவனாக விளங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பத்ம விபூஷண் விருது ராமோஜி ராவுக்கு வழங்கப்பட்டது.
ராமோஜி ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ராமோஜி ராவ் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடியில் விவசாய குடும்பத்தில் பிறந்தார் .
ராவ், மார்கதர்சி சிட் ஃபண்ட், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, ஹோட்டல் டால்பின் குரூப் உள்ளிட்ட நிறுவனங்களையும் நிர்வகித்து வந்தார். ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியவரும் இவர்தான். இந்த பிலிம் சிட்டியில் தான் பாகுபலி, புஷ்பா உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications