சந்திரபாபு நாயுடு ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி.. வறுத்தெடுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
ஹைதராபாத்:ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, கீழ்த்தரமான அரசியல் செயல் பாடுகளில் ஈடுபடும் தரங்கெட்டவர் என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள முதல்வர் சந்திர சேகர் ராவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
இது தவிர மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க வேண்டும் முழக்கமிட்டு அணி திரட்டும் வேலைகளில் இறங்கியுள்ளார். அதற்காக, மம்தா பானர்ஜியையும், நவீன் பட்நாயக்கையும் பார்த்துவிட்டு வந்துள்ளார்.
சர்ச்சை பேட்டி
இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி சர்ச்சையில் கொண்டு போய்விட்டுள்ளது. செய்தியாளர்களிடம் சந்திர சேகர் ராவ் கூறியதாவது :
மத்தியில் லோக்சபா தேர்தல் வர இன்னும் வெகு நாட்கள் இருக்கின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மாற்று அணி, உருவாக 100 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்னர் எப்படியாவது அந்த முயற்சியில் நல்ல பலனையடைய நாங்கள் முயல்வோம்.
காங்கிரஸ், பாஜக ஏமாற்றியது
தேசத்துக்கு புதிய அதிகாரமும், திட்டமும் தற்போது அதிக தேவை உள்ளதாக காணப்படுகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார மற்றும் வேளாண் திட்டங்கள் பலனளிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக மக்களை ஏமாற்றிவிட்டனர்.
மாற்று அணிக்கான முயற்சி
எனவேதான் மாற்று அணிக்கான முயற்சியை நான் தொடங்கியுள்ளேன். நான் மிகவும் வெளிப்படையாக இருக்கப் போகிறேன். எனக்கு, யாரைப் பற்றியும் கவலையில்லை. எந்த பயமும் இல்லை. தொடர்ந்து மாற்று அணிக்காக உழைக்க உள்ளோம். அடுத்த சில நாட்களில் அது நல்ல பயனை தரும்.
தெளிவில்லாமல் பேசும் நாயுடு
கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் தரங்கெட்டவர் சந்திரபாபு நாயுடு. நான் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மாற்று அணிக்காக பேசி கொண்டிருக்கிறேன். ஆனால் நாயுடு பேசுவது என்ன.... அவருக்கு தாம் என்ன பேசுகிறோம் என்பது பற்றி தெளிவு இருக்கிறதா?
மேனேஜர் என குற்றச்சாட்டு
அவர் ஒரு அரசியல் தலைவரே கிடையாது. ஒரு மேனேஜர்... ஆந்திர பிரதேசத்தில் அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி கண்டிப்பாக மண்ணைக் கவ்வும் என்று சந்திரசேகர் ராவ் கூறினார்.