ஹைதராபாத் ஹோட்டலில் நண்பனை கொன்ற இளைஞர்- காதலியை கழுத்தறுத்த காதலன்
அபுதாபியில் இருந்து இந்தியா வந்த இளைஞரை ஹைதராபாத் ஹோட்டலில் அவரது நண்பரே கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். அதே போல ஹோட்டல் அறையில் காதலியை கழுத்தறுத்த காதலன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
ஹைதராபாத்: அபுதாபியில் நல்ல வேலையில் இருக்கும் இளைஞர் ஒரு விழாவில் பங்கேற்க ஹைதராபாத் வந்திருந்த போது ஹோட்டல் அறையில் தனது நண்பரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார், நண்பனை கொன்ற இளைஞரை கைது செய்துள்ளனர். அதே போல ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது. காதலியை கழுத்தறுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த காதலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் பெயர் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பதாகும். 29 வயதாகும் ஸ்ரீகாந்த் குண்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். டெல்லி ஐஐடியில் படித்து விட்டு அபுதாபியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் விடுமுறைக்காக ஹைதராபாத் வந்திருந்தார். விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து அபுதாபி திரும்ப செல்வதற்காக ஜூலை 2ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் கிருஷ் இன் என்ற ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார் ஸ்ரீகாந்த். அவரைப் பார்க்க அவரது நண்பர் நரேஷ் என்பவர் வந்திருந்தார். இரண்டு நாட்கள் அவருடன் தங்கியிருந்தவர்களுக்குள் என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை. நரேஷ் தன்னிடம் இருந்த கத்தியால் ஸ்ரீகாந்தை குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த கொலை பற்றி விசாரித்த போலீசார், இது திட்டமிட்ட கொலை என்று கூறியுள்ளனர். ஏன் இந்த கொலை, ஸ்ரீகாந்த் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் விசாரித்து வருகின்றனர். நரேசும் ஸ்ரீகாந்தும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களானார்கள். கடந்த இரண்டு நாட்கள் அறையில் தங்கியிருந்த நிலையில் 5ஆம் தேதி இரவு வரை ஹோட்டல் அறை திறக்கப்படவில்லை சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அறையை உடைத்து பார்த்த போது ஸ்ரீ காந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். நரேசும் கழுத்தை அறுத்துக்கொண்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இருவரையும் மீட்ட போலீசார் ஸ்ரீகாந்த் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நரேஷை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நரேஷ் குணமடைந்து பேசினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
காதலி கழுத்தறுத்த காதலன் கைது
ஹைதராபாத்தில் ஹோட்டலில் அறையெடுத்து தங்கிய காதலர்களுக்குள் தகராறு ஏற்படவே காதலன் காதலி கழுத்தை அறுத்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற வாலிபர் ஹைதராபாத்தின் தில்சுக் நகருக்கு வந்து பிருந்தாவன் எனும் ஹோட்டலில் ரூம் எடுத்துள்ளார். அதன் பின்னர் தனது காதலிக்கு போன் செய்து அவரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த காதலிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் கோபத்தில் அந்த வாலிபர் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனால் மிரண்டு போன பெண் கதவைத் திறந்து வாசலுக்கு வெளியே கத்திக் கொண்டே ஓடினார். இதைப்பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தபோது அந்த வாலிபரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கவே அவரையும் மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications