தெலுங்கானா: சர்ச்சை எம்எல்ஏ-வுக்காக ஒட்டுமொத்த பாஜக தலைகளும் சடுகுடு ஆடும் விசித்திரம்-ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜா சிங் எம்.எல்.ஏ.வை தேர்தலுக்காக மீண்டும் கட்சியில் சேர்க்க பாஜக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
தெலுங்கானாவில் பிற மதங்களை அவதூறாக பேசி தொடர் சர்ச்சைகளில் சிக்கியார் ராஜா சிங் எம்.எல்.ஏ.. நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக ஆகஸ்ட் மாதம் ராஜா சிங்குக்கு எதிராக பெரும் போராட்டங்கள் ஹைதராபாத்தில் வெடித்தன. ராஜா சிங் கைது செய்யப்படாமல் இருந்தால் வன்முறை உருவாகும் சூழ்நிலை இருந்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் ராஜா சிங் கைது செய்யப்பட்டார். ஆனால் உடனடியாக ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். அதே நேரத்தில் பாஜக, ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்து அறிவித்தது.

ராஜா சிங்-க்கு சீட் இல்லை?: தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் மீண்டும் ராஜா சிங் பெயர் அரசியல் களத்தில் அடிபடுகிறது. ராஜா சிங் வெற்றி பெற்ற கோஷா மஹால் தொகுதியில் மூத்த தலைவர் முகேஷ் கவுட் மகன் விக்ரம் கவுட், பாஜக வேட்பாளராக போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ராஜா சிங் தரப்பு கொந்தளித்து போயிருக்கிறது.
ராஜா சிங் ஆதரவு கோஷ்டி: பாஜகவில் பல்வேறு தலைவர்களும் ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்து அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பாஜகவில் நபிகள் நாயகம் சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் போல ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது இந்த தலைவர்களின் கோரிக்கை. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களிடையே பெரும் மோதலே வெடிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறதாம்.
போர்க்கொடி தூக்கும் ராஜா சிங்: அதேபொல தாம் வெற்றி பெற்ற Goshamahal -கோஷாமஹால் தொகுதியில் மீண்டும் போட்டியிட ராஜா சிங் விரும்புவதாக கூறப்படுகிறது. அப்படி கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை எனில் பாஜகவைவிட்டு விலகி ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைவார் ராஜா சிங் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ராஜா சிங் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் பிஆர்எஸ் கட்சிக்கு தாவ மாட்டேன்; அப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் அரசியலில் இருந்து சற்று விலகி நின்று 'இந்து' தேசத்துக்கான கடமைகளை செய்வேன் என கூறியுள்ளார். ஒற்றை எம்.எல்.ஏ.வுக்காக ஒட்டுமொத்த பாஜக தலைகளும் முட்டி மோதுகின்றனர்!












Click it and Unblock the Notifications