தேர்தலோ தேர்தல்: 3 நாளில் 2-வது முறையாக தெலுங்கானாவில் மோடி-ரூ8,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!
ஹைதராபாத்: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு கடந்த 3 நாட்களில் இன்று 2-வது முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். தெலுங்கானாவில் ரூ8,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
தெலுங்கானாவில் ஞாயிற்றுக்கிழமையன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, தெலுங்கானாவின் நீண்டகால கோரிக்கையான தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. மேலும் ரூ13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

3 நாட்களில் 2-வது முறையாக வருகை: இதனைத் தொடர்ந்து இன்று 2-வது முறையாக மீண்டும் நிஜாமாபாத் வருகை தருகிறார் பிரதமர் மோடி. இன்றைய பயணத்தின் போது ரூ8,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். என்.டி.பி.சியின் தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 800 மெகாவாட் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
மனோகராபாத் மற்றும் சித்திபேட்டையை இணைக்கும் புதிய ரயில் பாதை, தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்
ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு: சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு (சி.சி.பி) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆதிலாபாத், பத்ராத்ரி கொத்தகூடம், ஜெயசங்கர் பூபாலபள்ளி, ஜோகுலாம்பா கட்வால், ஐதராபாத், கம்மம், குமுராம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், மகபூப்நகர் (படேபள்ளி), முலுகு, நாகர்கர்னூல், நல்கொண்டா, நாராயண்பேட்டை, நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா, ரங்காரெட்டி (மகேஸ்வரம்), சூர்யபேட், பெத்தபள்ளி, வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த சி.சி.பி.க்கள் கட்டப்படும்.
சத்தீஸ்கரில் மோடி: முன்னதாக தேர்தல் நடைபெற உள்ள மற்றொரு மாநிலமான சத்தீஸ்கர் செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு ரூ26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.












Click it and Unblock the Notifications