ஓவைசி தம்பிக்கு சபாநாயகர் பதவியா.. எம்எல்ஏவாக பதவியேற்க மறுத்த பாஜகவினர்! பரபர தெலுங்கானா
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இடைக்கால சபாநாயகராக ஓவைசியின் தம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அக்பருதீன் ஓவைசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு எம்எல்ஏவாக பதவியேற்காமல் அவர்கள் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா கடந்த 2014ம் ஆண்டு புதிய மாநிலமாக உருவானது. இதையடுத்து 2014, 2019 சட்டசபை தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி வென்றது. 2 முறையும் சந்திரசேகர்ராவ் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அந்த மாநிலத்தின் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்து முடிந்தது. அங்குள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் டிசம்பர் 3ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானாவில் ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 64 இடங்களில் வென்றது. மாறாக சந்திரசேகர்ராவின் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில் மட்டுமே ஜெயித்து ஆட்சியை பறிகொடுத்தது. இதுதவிர பாஜக 8, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, சிபிஐ 1 இடத்திலும் வென்றன.
தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். 11 பேர் அமைச்சர்களாகினர். இதையடுத்து தெலுங்கான சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக ஓவைசியின் தம்பி அக்பருதீன் ஓவைசி நியமனம் செய்யப்பட்டார்.
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த இவர் சந்திரயான்குட்டா தொகுதியில் 6வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் அவர் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி இன்று பதவியேற்றார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து தெலுங்கானாவின் சட்டசபை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் இருக்கையில் அக்பருதீன் ஓவைசி அமர்ந்தார். இதையடுத்து அக்பருதீன் ஓவைசி முன்னிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் அக்பருதீன் ஓவைசி இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியை பாஜக முற்றிலுமாக புறக்கணித்தது. இவர்கள் தெலுங்கானாவின் புதிய சபாநாயகர் நியமனம் செய்யப்பட்ட பிறகு பதவியேற்க உள்ளார். இந்த பொறுப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications