புதிதாக உள்ளே வரும் 3 பேர்.. ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் மாற்றம்? காங். மேலிடம் போடும் கணக்கே வேற!
ஹைதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பிஆர்எஸ் தலைவர் சந்திர சேகர் ராவின் ஆட்சி அகற்றப்பட்டு முதல் முறையாக காங்கிரஸ் அங்கு ஆட்சியைப் பிடித்தது.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர். தெலுங்கானா அமைச்சரவையில், உத்தம் குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, கோமாட்டிரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு, பொங்குலேடி சீனிவாச ரெட்டி, பொன்னம் பிரபாகர், சுரேகா கோண்டா, அனசுயா சீதக்கா, தும்மல நாகேஸ்வர ராவ், ஜூபல்லி கிருஷ்ணராவ் ஆகியோர் பதவியேற்றனர்.
அமைச்சரவையில் மேலும் ஆறு அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என அப்போதே கூறப்பட்டது. ஆனால், அமைச்சரவை இன்று வரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் சங்கராந்திக்குப் (பொங்கல்) பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்ய ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 அமைச்சர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
அமைச்சர் பதவிகளை நிரப்பக் கோரி ரேவந்த் ரெட்டி மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே நிறைய அழுத்தம் கொடுத்துள்ளனர். தற்போது, ஐதராபாத், ரங்காரெட்டி, நிஜாமாபாத் மற்றும் அடிலாபாத் ஆகிய மாவட்டங்களில் இருந்து அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. அப்பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவி பெற காய்நகர்த்தி வருகின்றனர்.
எனினும், அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய பிளானை ரகசியமாகவே வைத்துள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. தெலுங்கானா விவகாரத்துக்குப் பொறுப்பான காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்சி, மக்களவைத் தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து ஜனவரி 3ஆம் தேதி காந்தி பவனில் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் முதற்கட்ட கூட்டத்தை நடத்துகிறார். அப்போது ரேவந்த் தனது கேபினட் விரிவாக்க திட்டங்களை வெளியிட்டு கூட்டத்தில் விவாதித்தால் ஒரு தெளிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேரக்கூடிய பிஆர்எஸ் மற்றும் பாஜகவின் பெரிய தலைவர்களுக்கு சில அமைச்சரவை பதவிகள் காலியாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு தற்போது 64 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்கள் சேர்ந்தால் இந்த எண்ணிக்கை 80 ஆக இருக்கலாம் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அப்போதும் பெரிய தலைவர்களுக்கு அவர்களின் அந்தஸ்து மற்றும் கோரிக்கைகளைப் பொறுத்து அமைச்சரவையில் 3 இடங்கள் வரை வழங்கப்படலாம் என்பதால், அமைச்சரவை பதவிகளை காலியாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. மேலும், காங்கிரஸுக்குள் கேபினட் பதவிகளுக்கு பலர் ஆர்வத்துடன் உள்ளனர். காலியாக உள்ள ஆறு இடங்களை உடனடியாக நிரப்பினால், வாய்ப்பை இழந்தவர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும், இது அடுத்த மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு நல்லதல்ல.
தெலுங்கானா காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவர் மது யாஸ்கி கவுட் ஏற்கனவே பிஆர்எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் கட்சித் தலைமையால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். சங்கராந்திக்கு பின்னரோ ஜனவரி இறுதிக்குள்ளோ ஒரு மினி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம். மீதமுள்ளவை மக்களவைத் தேர்தல் நெருங்கும்போது நிரப்பப்படலாம் என்கிறார்கள் தெலுங்கானா காங்கிரஸ் வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications