அமைச்சர்களின் சம்பளத்தில் 50% ‘கட்'.. அரசு ஊழியர் + ஓய்வூதியதாரர்களுக்காக முதல்வர் அதிரடி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நிலுவையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை செலுத்துவதற்காக அமைச்சர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்க முதல்வர் ரேவந்த் ரெட்டி முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி இருக்கிறார். இந்நிலையில் தான் தெலுங்கானா அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

தெலுங்கானாவில் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை தொகைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ரூ.6,200 கோடி வரையிலும், ஓய்வுபெற்றவர்களுக்கு சுமார் ரூ.8,000 கோடி வரையிலும் நிலுவைத் தொகை உள்ளதாக கூறப்படுகிறது.
50 சதவீதம் சம்பளம் குறைப்பு
இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தற்போதைய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நிலுவையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்பட பிற பலன்களை வழங்க அமைச்சர்களின் சம்பளத்தில் 50% சதவீதத்தைக் குறைக்கும் முடிவை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எடுத்துள்ளார்.
உறுதி செய்த அமைச்சர்
இதனை தெலுங்கானா தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ''அமைச்சர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைப்பது என்பது தானாக முன்வந்து எடுத்துள்ளோம். தேவைப்பட்டால் இன்னும் கூட சம்பளத்தை குறைக்க தயாராக இருக்கிறோம்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவை தொகைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அமைச்சர்கள் தங்களின் சம்பளத்தை பாதியாக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். பிற மக்கள் பிரதிநிதிகளும் சம்பளத்தை விட்டு கொடுக்கலாம்.
100 நாள் திட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான நிலுவை தொகையை சரிசெய்வதற்கான பணிகளை 100 நாட்களுக்குள் தொடங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதற்கான தனி குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் அரசு ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, ஓய்வூதியதாரர் குழுவினருடன் சேர்ந்து செயல்பட உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
இமாச்சலை தொடர்ந்து தெலுங்கானா
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்க அமைச்சர்களின் சம்பளம் குறைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சில மாநிலங்களில் நடந்துள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசியல் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இமாச்சல் பிரதேசத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications