பிரதமரை பார்த்ததும் மேடையில் அழுத எம்ஆர்பிஎஸ் தலைவர்! கட்டியணைத்து ஆறுதல் கூறிய மோடி! உருக்கம்
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை பார்த்த உடன் எம்ஆர்பிஎஸ் தலைவர் மந்த கிருஷ்ண மடிகா கண்கலங்கினார். இதையடுத்து பிரதமர் மோடி அவரை தனது தோள்களில் சாயவைத்து கட்டியணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் கடந்த 2014ல் புதிதாக உருவானது. தற்போது வரை 2 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் பிஆர்எஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 2 முறையும் அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் 3வது முறையாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த 2 கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் தெலங்கானாவில் பாஜகவும் தனது செல்வாக்கை நிரூபிக்க துடித்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று பிரதமர் நரேந்திர மோடி தெலங்கனாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது மேடையில் பிரதமர் மோடியுடன் எம்ஆர்பிஎஸ் தலைவர் மந்த கிருஷ்ணா மடிகா அமர்ந்திருந்தார்.
அதாவது ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள மடிகா எனும் தலித் சமுதாய மக்கள் தோல் தொழில் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் எம்ஆர்பிஎஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக தான் மந்த கிருஷ்ணா மடிகா உள்ளார். இந்த மக்களுக்கு உள்இடஒதுக்கீடு கோரி அவர் போராடி வருகிறார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை பார்த்தவுடன் மேடையில் மந்த கிருஷ்ணா மடிகா கண்கலங்கினார். இதை பார்த்த பிரதமர் மோடி அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். அப்போது பிரதமர் மோடி அவரை தனது தோளில் சாயவைத்து தலையில் தட்டிக்கொடுத்து அரவணைத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications