கேட்டது ரன்வீர் சிங்.. ஆனா கெடச்சது.. தெலுங்கானாவை தெறிக்கவிட்ட முஸ்லீம் விநாயகர்
ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்தி என்றாலே கொண்டாட்டம், கோலாகலம் ஆங்காங்கே சிறு சிறு சலசலப்புகள் வருவது இயல்பு. ஆனால் தெலங்கானாவில் ஒரு விநாயகர் சிலை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பார்ப்பதற்கு முஸ்லிம் கெட்டப்பில் இருந்ததால் சிலை சமூகவலைதளங்களில் வைரலானது. கடைசியில் அந்த சிலையை வைத்த ஒருங்கிணைப்பாளர்கள் சொன்னதுதான் ஹைலைட்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. மூன்று, ஐந்து, ஏழாவது நாள்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள் சில இடங்களில் அமைதியாகவும், சில இடங்களில் சர்ச்சைகளுடனும் முடிந்துள்ளன.

பொதுவாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே, பொது இடத்தில் மக்கள் வைக்கும் வித்தியாசமான விநாயகர் சிலைகள் கவனம் பெறும். பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், விஜய் கெட்டப் என்று இந்தாண்டும் நிறைய கெட்டப்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மக்களின் கவனத்தை ஈர்த்தன.
அப்படித்தான் தெலங்கானா மாநிலத்தில் வைக்கப்பட்ட ஒரு சிலை மக்களிடம் பெரியளவுக்கு கவனத்தை ஈர்த்தது. தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் வைக்கப்பட்ட ஒரு விநாயகர் சிலை, பார்ப்பதற்கு முஸ்லிம் கெட்டப்பில் இருந்தது. இதனால் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையாகியுள்ளது.
ஒருபக்கம், “இதுதான் தேசிய ஒருமைப்பாடு. மதச்சார்பின்மை தான் நம் அடையாளம்.” என்று ஒரு தரப்பிலும் மறுபக்கம், “முஸ்லிம் கெட்டப்பில் விநாயகர் சிலை வைக்கலாமா. இது இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டது.” என்று ஒரு தரப்பினரும் கருத்து கூறினர். இந்த விநாயகர் சிலை சர்ச்சையானதும் சிலை வைத்தவர்கள் விளக்கமளித்துள்ளனர். கடைசியில் அந்த விநாயகர் சிலை வைத்த ஏற்பாட்டாளர்கள் சொன்னதில் தான் டிவிஸ்ட் இருந்தது. உண்மையில் அந்த விநாயகர் சிலை முஸ்லிம் கெட்டப்பில் வைக்க திட்டமில்லையாம்.
இதுகுறித்து அந்த விநாயகர் சிலையை வைத்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "கடந்த 2015ம் ஆண்டு ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பஜிராவ் மஸ்தானி (Bajirao Mastani) படத்தில் ஈர்க்கப்பட்டு, அந்த கெட்டப்பில் விநாயகர் சிலை வடிவமைக்க முடிவு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தது ஒன்று. சிலை வடிவமைக்கப்பட்ட பிறகு அது வேறு மாதிரி ஆகி சர்ச்சைக்கு வழிவகுத்துவிட்டது.
எங்களுக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறோம். சிலை நாங்கள் எதிர்பார்த்தபடி வரவில்லை. இருப்பினும் இதை பிரச்னையாக மாற்றவும் நாங்கள் விரும்பவில்லை. அதேபோல மக்களும் இதை பெரிதுபடுத்த வேண்டாம்." என்று கூறியுள்ளனர்.
அந்த விநாயகர் சிலைக்கு, ராஜா காலத்து உடை, தலையில் குல்லா வைத்துள்ளனர். 2015ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான பாஜிராவ் மஸ்தானி படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்திருப்பார்கள். அதில் வரும் ரன்வீர் சிங்கின் கெட்டப்பை போல இந்த விநாயகர் சிலையை வடிவமைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் வடிவமைப்பாளரின் தவறால், அது வேறு மாதிரி ஆகிவிட்டதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இது சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஒருபக்கம் மதச்சார்பின்மை, மறுபக்கம் இந்துமத வெறுப்பு என்று இரண்டு விதமான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல, "நம் நாட்டில் எவ்வளவு தொழில்நுட்பங்கள் வந்தாலும் நினைத்தபடி சிலை வருவதில்லையே." என்று இதை சில நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications