நடிகர் சோனு சூட்தான் உண்மையான சூப்பர் ஹீரோ .. அமைச்சர் புகழாரம்.. சோனு சூட் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
ஹைதராபாத்: நடிகர் சோனு சூட்தான் உண்மையான சூப்பர் ஹீரோ என்று தெலுங்கானா நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் கூறினார்.
இந்திய திரையுலக ஹீரோக்களில் மிக மிக தனித்துவமான, வித்தியாசமான குணம் கொண்டவர் நடிகர் சோனு சூட்.
இந்தியாவின் எந்த மூலையிலும் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தாலும் உதவுவதற்காக முதல் ஆளாக போய் நிற்பார் சோனு சூட்.
உதவி புரியும் சோனு சூட்
இத்தகைய உதவும் மனம் படைத்த சோனு சூட் கொரோனா தொற்று பரவும்போது மட்டும் சும்மா இருப்பாரா? ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோரை தனது சொந்த செலவில் அனுப்பி வைத்து உதவி செய்தது, ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்தல் என மக்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அனைத்தையும் சோனு சூட் செய்து கொண்டிருக்கிறார்.
மக்கள் பாராட்டு
கொரோனா தொற்றின் வேகம் குறைந்து விட்ட போதிலும், சோனு சூட்டின் உதவும் வேகம் குறையவில்லை. இதனால் இவர்தான் உண்மையான ஹீரோ என்று மக்கள் பாராட்டி வரும் நிலையில் தெலுங்கானா அமைச்சர் ஒருவரும் சோனு சூட்டை ஹீரோ என்று புகழ்ந்துள்ளார். தெலுங்கானாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருப்பவர் கே.டி.ராமாராவ்.
அமைச்சரை பாராட்டிய நபர்
சமீபத்தில் அமைச்சர் செய்த உதவியால் நெகிழ்ந்து போன ஒருவர், ' நண்பரின் தந்தைக்கு 10 மணி நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்று உங்களிடம் கோரியிருந்தேன். உடனடியாக உதவி செய்தீர்கள். எங்களுக்கு மட்டுமில்லாது தெலுங்கானா மக்கள் பலருக்கு நீங்கள் செய்த உதவி அளப்பரியது. நீங்கள்தான் சார் உண்மையான ஹீரோ' என்று கே.டி.ராமாராவ் டுவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்து இருந்தார்.
சோனு சூட்தான் உண்மையான ஹீரோ
இதனை கவனித்த அமைச்சர், 'உங்களுக்கு நன்றி. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மட்டுமே. மக்களின் வலியைக் குறைக்க என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உண்மையான சூப்பர் ஹீரோ சோனு சூட்தான்' என்று அந்த நபருக்கு பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் கருத்துக்கு நடிகர் சோனு சூட் பதில் அளித்துள்ளார்.
சோனு சூட் பதில்
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ' உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சார். தெலுங்கானா மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நீங்கள்தான் உண்மையான ஹீரோ. உங்கள் தலைமையின் கீழ் மாநிலம் சிறப்பாக மேம்பட்டுள்ளது. தெலுங்கானாவை எனது இரண்டாவது வீடாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் அது நான் பணிபுரியும் இடம். இத்தனை ஆண்டுகளாக தெலுங்கானா மக்கள் என் மீது நிறைய அன்பைப் பொழிந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.