இது என்ன புது டைப் மாஸ்க்... பறவை கூட்டையே முக கவசமாக மாற்றிய முதியவர்... வைரல் புகைப்படம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் பறவையின் கூட்டை மாஸ்க்காக அணிந்து, தனது ஓய்வூதிய தொகையை வாங்க வந்த முதியவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பொது இடங்களில் மாஸ்க் அணிவதும், தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாஸ்க் அணியாமல் இருப்பவர்களிடமும் மாஸ்க்கை முறையாக அணியாதவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதத்திற்குப் பயந்தே பலரும் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். இந்நிலையில், தெலங்கானாவில் அபராதத்திற்குப் பயந்து முதியவர் ஒருவர் பறவைக் கூட்டையே மாஸ்க்காக அணிந்து வந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் மக்புப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேகலா குர்மய்யா. இந்த முதியவர் தனது ஓய்வூதிய தொகையை வாங்க, மண்டல ஓய்வூதிய அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், மாஸ்க் இல்லாமல் அங்குச் சென்றால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பறவைக்கூட்டையே மாஸ்க்காக இவர் அணிந்து சென்றுள்ளார்.
இவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரால் மாஸ்க் வாங்க முடியவில்லை என்றாலும் தன்னால் முடிந்த ஒரு மாஸ்க்கை ரெடி செய்து அணிந்து வந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், மாஸ்க்குகளை வாங்க இயலாதவர்களுக்கு இலவசமாக மாஸ்க்குகளை வழங்க வேண்டும் என்றும் பலரும் தெலங்கானா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications