தெலுங்கானா குதிரை பேரம்.. லீக்கான ஆடியோ, வீடியோ! டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் - போலீஸ் விசாரணை
ஐதராபாத்: கட்சியில் இருந்து விலக ரூ.100 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கு கொலை மிரட்டல் வருவதாக வந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டதில் இருந்தே கேசிஆர் தான் முதலமைச்சராக உள்ளார்.
பாஜக இங்கு ஆட்சியை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

எம்.எல்.ஏக்களிடம் பேரம்
பாஜகவுக்கு எதிராக 2024 லோக் சபா தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்க அவர் முயன்று வருகிறார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய கட்சியையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரிடம் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

3 பேர் கைது
ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு ஆகிய 4 எம்.எல்.ஏக்களிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் கட்சியிலிருந்து விலகிவிடுமாறும், அதற்கு ரூ.100 கோடி வரை தருவதாகவும் பேரம் பேசியதாக வெளியான 2 ஆடியோக்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.

பாஜக மறுப்பு
இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் பேரம் பேசிய சதீஷ் சர்மா, கே.நந்தகுமார், சிம்ஹயாஜுலு ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டது. அதன் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பாஜக மறுத்து வந்தது.

வெளியான வீடியோ
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் 4 எம்.எல்.ஏக்களை மேடையில் ஏற்றி பாராட்டிய சந்திரசேகர் ராவ், டெல்லியை சேர்ந்த சில புரோக்கர்கள் பேரம் பேசியதாக விமர்சித்தார். அதன் தொடர்ச்சியாக சந்திரசேகர் ராவ் பாஜகவினர் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்களிடம் பேசும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

மிரட்டல்
இந்த நிலையில் பேரம் பேசிய தகவலை வெளியிட்ட ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு ஆகிய எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்களுக்கு மிரட்டல் அழைப்பு வருவதாக கூறி இருக்கிறார். இதனை அடுத்து எம்.எல்.ஏக்கள் அளித்த புகாரை தொடர்ந்து அவர்களின் தொகுதிகளுக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications