பிரபல ஆங்கில நாளிதழின் முன்னாள் உரிமையாளர் வெங்கட்ராம் ரெட்டி அமலாக்கத் துறையால் கைது
ஹைதராபாத்: பிரபல ஆங்கில நாளிதழின் முன்னாள் உரிமையாளர் வெங்கட்ராம் ரெட்டி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரது தந்தை சந்திரசேகர் ரெட்டி பழம்பெரும் காங்கிரஸ் தலைவராவார். அது மட்டுமல்லாது மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், இதேபோல தெலங்கானாவிலும் பிரபல ஆங்கில நாளிதழின் முன்னாள் உரிமையாளர் வெங்கட்ராம் ரெட்டியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை தெலங்கானா மட்டுமல்லாது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

வெங்கட்ராம் ரெட்டி டெக்கான் குரோனிக்கிள் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (DCHL) செய்தி பத்திரிகையின் முன்னாள் தலைவராக பதவி வகித்து வந்தவராவார். இவர் தலைவராக பதவி வகித்த காலத்தில் போலியான ஆவணங்கள் மூலம் கனரா வங்கியிலிருந்து பணம் பெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இவருடன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பிகே ஐயர் மற்றும் ஆடிட்டர் மணி உமன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி தெலங்கானாவில் இன்று இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வெங்கட்ராம் ரெட்டி காங்கிரஸ் கட்சி பின்னணி கொண்ட குடும்பதை சேர்ந்தவராவார். இவரது தந்தை சந்திரசேகர் ரெட்டி தீவிரமான காங்கிரஸ் கட்சிக்காரராவார். கடந்த 1981ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
இவர் மறைந்த பின்னர், வெங்கட்ராம் ரெட்டி தனது தந்தையை போல இரண்டு ஆண்டுகள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் இவரது பெயரை கட்சி பரிசீலிக்கவில்லை. எனவே அரசியலிலிருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து இவரது கவனம் விளையாட்டு பக்கம் திரும்பியது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய காலம் அது. அப்போதுதான் ஒவ்வொரு அணியாக வெளியில் தெரிய தொடங்கின. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் முதல் உரிமையாளராகவும் சந்திரசேகர் ரெட்டி பணியாற்றியுள்ளார். இந்த காலக்கட்டத்தில்தான் கனரா வங்கியின் செகந்தராபாத் கிளையிலிருந்து ரூ.1,230 கோடியை இவர் கடனாக வாங்கியுள்ளார்.
இந்த கடன்கள் எந்த நோக்கத்திற்காக வாங்கப்பட்டதோ அதற்கு செலவிடாமல் வேறு விஷயங்களுக்கு செலவிட்டுள்ளதாகவும், வாங்கப்பட்ட கடனில் சில கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்படவில்லை என்றும் கூறி கடந்த 2013ம் ஆண்டு கனரா வங்கியின் செகந்தராபாத் கிளை புகார் அளித்திருந்தது. இதனையடுத்து இதே ஆண்டில் ஜூலை 9ம் தேதியன்று சிபிஐ வெங்கட்ராம் ரெட்டி உட்பட மூவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தது.
இந்த வழக்கு ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்கையில் மறுபுறம் தனியார் பைனான்சியர் ஒருவரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக வெங்கட்ராம் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெங்கட்ராம் ரெட்டியை சிபிஐ கைது செய்தது. இருப்பினும் ஒரு சில நாட்களில் இவர் ஜாமீனில் வெளி வந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்தது. வெங்கட்ராம் ரெட்டிக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் இந்த அமைப்பு திரட்டியது.
அதில் சில முக்கியமான தகவல்கள் வெளியாகின. அதாவது வெங்கட்ராம் ரெட்டி கடன் வாங்கும்போது, கனரா வங்கிக்கு தவறான நிதிநிலை அறிக்கையை அளித்திருக்கிறார். மேலும், வேறு சில நிதி நிறுவனங்களிலிருந்தும் தான் இதற்கு முன்னர் வாங்கிய கடனையும் வெங்கட்ராம் வேண்டும் என்றே மறைத்திருக்கிறார். மட்டுமல்லாது டிசிஎச்எல்லில் முதலீடு செய்வதாக கூறி வாங்கிய பணத்தை ஐபிஎல் உரிமை, ஒடிஸி புத்தகக் கடைகள், லைஃப் ஸ்டைல் பொருட்கள், மற்றும் விமான நிறுவனத்திலும் முதலீடு செய்திருக்கிறார்.
இத்துடன் நிற்காமல் கடன் வாங்கிய காரில் சொகுசு கார்களையும் அவர் வாங்கி, ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார். இது எல்லாம் சேர்ந்து டிசிஎச்எல்லில் துண்டு விழுந்திருக்கிறது. அந்நிறுவனம் லாபத்தில் இயங்காமல் நஷ்டமடைந்திருக்கிறது. எனவே வெங்கட்ராம் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத வலையில் சிக்கிக்கொண்டார் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications