ஜெகனின் 500 கோடி அரண்மனை.. தங்கத்தால் அறைகள்.. 12 கடல் வியூ படுக்கைகள்.. இனி என்னாகும்?
ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலையின் ஒரு பகுதியை இடித்து 500 கோடியில் பிரம்மாண்டமான பங்களா கட்டியிருக்கிறார். அரண்மனை போல் உள்ள அந்த பங்களா குறித்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக மொத்த ஆந்திராவையும் அதிர வைத்துள்ளது. மலையைத் தகர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் கடற்கரை வியூ அற்புதமாக தெரிகிறது. இதனை என்ன செய்வது என்ற குழப்பத்தில் சந்திரபாபு நாயுடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி கடந்த 2019ம் ஆண்டு 2024 வரை நடந்தது.. 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் வென்று ஆட்சியை பிடித்தது. ஆட்சி பறிபோன நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதல் அவரது அமைச்சரவையில் இருந்த அனைத்து முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முனைப்பு காட்டி வருகிறார்.

அந்த வகையில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள், அரசின் ஒப்பந்தங்கள் குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வராக இருந்த காலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி 500 கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான பங்களாவை விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தகர்த்து கட்டியிருந்தார். இந்த பங்களா குறித்து கடந்த ஆட்சியில் எந்த கேள்விகளும் கேட்கப்படாமல் இருந்தது. தற்போது ஆட்சிகள் மாறியதால், காட்சிகளும் மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த பங்களா குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் ஒரு பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் மிகப்பெரிய அரண்மனையை பிரம்மாண்டமாக பங்களாவாக கட்டியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. இதை முதல்வரின் பங்களாவாக அவர் பயன்படுத்தியும் வந்துள்ளார். சுமார் 10 ஏக்கரில் இருக்கும் இந்த அரண்மனை, சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மலையை உடைத்து கட்டப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி இருந்தால் மட்டுமே கட்ட முடியும் என்கிற நிலையில், மத்திய அரசு 2021ம் ஆண்டு ஒப்புதல் அளித்தருந்தது இப்போது விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் அரண்மனை என்று பெயருக்காக சொல்வதற்கு இல்லை.. ஏனெனில் பங்களாக்களில் உள்ளே பல பொருட்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனை நான்கு பகுதிகளைக் கொண்ட கட்டடங்களாக அமைக்கப்பட்டுள்ளதும் வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. 7 அரண்மனை கட்டிடங்கள் உள்ளதாகவும், கட்டுமான செலவு சதுர அடிக்கு ₹15,293 என்கிற அளவில் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகறிது. ஆடம்பரத்தை பிரதிபலிக்கிறது. அரண்மனை பங்களாக்கள் முழுக்க இத்தாலிய பளிங்கு தரைகள் உள்ளதாகவும், 200 சரவிளக்குகள் உள்ளதாகவும், 12 படுக்கை அறைகள், கடற்கரை வியூ பாயிண்டில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட ₹25 லட்சம் குளியல் தொட்டி, ₹5 லட்சம் கமோட்கள் மற்றும் வீடு முழுக்க குளுகுளு ஏசி வசதி, மிக உயர்தரமான பொருட்களால் நிரம்பி உள்ளதாம். இந்த அரண்மனை பங்களாவை சொந்தமாக்கி பயன்படுத்த போகிறதா அல்லது அரண்மனைனை பூட்டி சீல் வைப்பதா என்ற விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆந்திராவில் வறுமையில் மக்கள் பலர் வாடி வரும் நிலையில் இவ்வளவு பெரிய அரண்மனை பங்களாவை ஜெகன் கட்டியதற்கு பதில், ஏழைகளுக்கு அந்த பணத்தில் திட்டங்களை அறிவித்திருக்கலாம் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications