முதல் நாளே இப்படியா! ரேவந்த் ரெட்டி பதவியேற்கும் போதே முதல்வர் இல்லத்தில் இரும்பு கேட் இடிப்பு! பரபர
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்கும் போதே முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த இரும்பு கேட்களும், தடுப்புகளும் அகற்றப்பட்டன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களைக் காங்கிரஸ் இழந்த போதிலும் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், அம்மாநில ஆளுநர் தமிழிசை அவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இரும்பு கேட்கள் அகற்றம்: இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவியேற்ற சில நிமிடங்களில் அவர் தெலுங்கானா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி அந்த கேட்டும் அகற்றப்பட்டது. ஒரு பக்கம் பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்த நிலையில், அது முடியும் முன்னரே முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனில் இருந்த அந்த கேட்டும், இரும்பு தடுப்புகளும் அகற்றப்பட்டது.
பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்த போதே பல புல்டோசர்கள், டிராக்டர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் முதல்வரின் இல்லத்தின் முன்பு இருந்த அந்த இரும்பு கேட் மற்றும் தடுப்புகளை அகற்றினர்.
என்ன காரணம்: தேர்தல் பிரசாரத்தின் போதே, காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைத்தால் அந்த கேட்களும் தடுப்புகளும் அகற்றப்படும் என்று ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். ஹைதராபாத்தின் முக்கிய சாலையில் அமைந்துள்ள முதல்வர் இல்லத்தின் முன்பு இருக்கும் அந்த இரும்பு கேட்களும் தடுப்புகளும் டிராபிக் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகப் புகார்கள் இருப்பதாகவும் இதனால் அதை அகற்றுவேன் என்றும் ரேவ்ந்த் ரெட்டி பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார்.
அவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் முதல் நாளான நேற்றே அந்த இரும்பு தடுப்புகளும் கேட்களும் அகற்றப்பட்டன. மக்கள் தன்னை எளிதில் அணுகலாம் என்றும் இதன் காரணமாகவே அந்த இரும்பு கேட்களையும் தடுப்புகளையும் அகற்றுவதாக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு விழாவிலும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெயரும் மாற்றம்: தெலுங்கானா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் பிரகதி பவன் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பெயரை 'ஜோதிராவ் பூலே பிரஜா பவன்' என்று மாற்றியும் அவர் உத்தரவிட்டார். மேலும் இன்று டிசம்பர் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு 'பிரஜா தர்பார்' என்ற நிகழ்வு நடத்தப்படும் என்றும் இதில் பொதுமக்களின் குறைகளைக் கேட்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014இல் பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 9 ஆண்டுகளாக கேசிஆர் முதல்வராக இருந்த நிலையில், முதல்முறையாகக் காங்கிரஸ் வென்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக 54 வயதான ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். அதேபோல துணை முதலமைச்சராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவியேற்றார். மேலும் 11 பேர் அவருடன் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
தெலுங்கானா தேர்தலில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களைக் கைப்பற்றியது. அதேநேரம் ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸ் வெறும் 39 இடங்களில் மட்டுமே வென்றது. மேலும், பாஜக 8 இடங்களிலும் மஜ்லீஸ் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications