கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்தது ஏன்? மனைவி சொன்ன உருக்கமான காரணம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மாமன் மகளை காதலித்த தனது கணவருக்கு மனைவியே 2-ஆவது திருமணத்தை நடத்தி வைத்தது எதற்காக தெரியுமா? இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் மெக்பூபாத் மாவட்டத்தில் உள்ள குடுரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை சரிதா கண்டுபிடித்தார்.

இதையடுத்து எல்லா பெண்களை போல் சரிதாவும் அதிர்ச்சி அடைந்து கோபப்பட்டார். இதையடுத்து தனது கணவர் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்கு சரிதா நேரடியாக சென்றார். அப்போதுதான் தெரிந்தது, அந்த பெண் வேறு யாருமில்லை, தனது கணவரின் மாமன் மகள்தான் என்பது!
அந்த மாமன் மகளுக்கு மன நிலை சரியில்லையாம். அந்த பெண்ணின் அன்றாட பணிகளை கவனித்துக் கொள்ள கூட ஒரு துணை இல்லாமல் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த பரிதாபத்தின் அடிப்படையில்தான் சரிதாவின் கணவர், அந்த பெண் மீது காதல்வயப்பட்டிருந்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் நிலையை பார்த்த சரிதாவுக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை தனது கணவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதையடுத்து சரிதாவே அந்த பெண்ணின் வீட்டாரிடம் பேசி திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்திருந்தார். அத்துடன் தனது கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை தானே முன்னின்று செய்து வைத்தார்.
இதற்காக சரிதா மீது அவருடைய உறவினர்கள் கோபமடைந்தனர். மேலும் தங்கள் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற கவலையிலும் அவர்கள் இருந்தனர். இந்த திருமணத்தை சரிதாவே முன் வந்து செய்து வைத்தாலும் பலர் அந்த பெண்ணை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ஒரு சிலர், "நீ யாரையாவது விரும்பி இருந்தால் உன் கணவர் இது போல் உனக்கு செய்து வைப்பாரா, நீயே உன் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொள்கிறாயே" என்றெல்லாம் சரிதாவை ஏசினார்கள். ஆனால் இதையெல்லாம் சரிதா சிறிதும் சட்டை செய்யவில்லை. இந்த நிலையில் இது குறித்து சரிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது சரிதா கூறியதாவது: எனது கணவரின் மாமன் மகள் அன்றாடத் தேவைகளுக்கு கூட அடுத்தவர் உதவியை நாட வேண்டியிருக்கிறது. அந்த பெண் தற்போது குழந்தையை போன்றவர். எனவே அந்த பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு எனது கணவரை திருமணம் செய்து வைத்தேன். அவரை எனது சகோதரியாகவே நான் பார்க்கிறேன் என அந்த பெண் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications