ஐதராபாத் பெயரை மாற்றுவீங்களா.. யோகிக்கு எதிராக வரிந்து கட்டிய ஓவைசி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஐதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத், ஐதராபாத் பெயரை பாக்யநகர் என்று மாற்றுவோம் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி யோகி ஆதித்யநாத்தின் கருத்தை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் தற்போது பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் உள்ள சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறார். தெலுங்கானாவை பொறுத்தவரை அங்கு பி.ஆர்.எஸ் , காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

எனினும், பி.ஆர்.எஸ் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அங்கு இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. காங்கிரஸ், பாஜக கட்சியின் தேசிய தலைவர்களும் தெலுங்கானாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர்.
குறிப்பாக யோகி ஆதித்யநாத் பிரசரம் மேற்கொள்ளும் போது, ஐதரபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்றுவோம் என்றார். யோகி ஆதித்யநாத் கூறுகையில், " காங்கிரஸ் இந்த நகரை ஐதராபாத் என மாற்றியுள்ளது. ஆனால், இதை பாக்யநகராக மாற்ற இங்கு வந்துள்ளோம். நகரின் பாக்யா (லக்) ஆக மாற்றுவோம்" என்றார். அதேபோல், தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டியும் யோகி ஆதித்யநாத் பேசியதை ஆதரித்து பேசினார்.
மேலும், மெட்ராஸ், பாம்பே மற்றும் கல்கட்டா ஆகிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு இருப்பதை போல மாற்றுவோம் என்றார். யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்தை கடுமையாக சாடியுள்ள ஐதராபாத் எம்.பியும் அசாதுதின் ஓவைசி கூறியிருப்பதாவது:- பாக்யநகர் எங்கு இருந்து வந்தது என்பதை அவர்களிடம் கேளுங்கள். அப்படி எங்கு எழுதப்பட்டு இருக்கிறது என கேளுங்கள். நீங்கள் ஐதரபாத்தை வெறுக்கிறீர்கள்.. அதனால்தான் வெறுப்பின் அடையாளமாக இதை மாற்ற விரும்புகிறீர்கள். ஐதராபாத் எங்களின் அடையாளம். நீங்கள் எப்படி பெயரை மாற்றுவீர்கள்? வெறுப்பு அரசியலை அவர்கள் (பாஜக) செய்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications