நடுரோட்டில் பணத்தை வானத்தை நோக்கி வீசி ஸ்டண்ட் செய்யும் யூடியூபர்கள்.. கொதிக்கும் நெட்டிசன்கள்
ஹைதராபாத்: யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வியூஸ்களை அதிகரிக்கவும், லைக்குகளை அதிகரிக்கவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும், நடுரோட்டில் பணத்தை தூக்கி வீசுவது அதிகரித்துள்ளது. இந்த சம்பவங்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் முக்கிய சாலையில் அடிக்கடி நடக்கிறது. இதுபோன்ற யூடியூபர்கள் சைபராபாத் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவில் 2017ம் ஆண்டு ஜியோ சிம் வருகைக்கு பிறகு தொழில் நுட்ப ரீதியாக புரட்சி ஏற்பட்டது. அன்லிமிடெட் இண்டர்நெட் மற்றும் அளவற்ற கால் வசதி எல்லாவற்றையும் மாற்றியது. அதுவரையில் யூடியூப்பர்கள் என்ற ஒரு கான்செப்ட்டே கிடையாது. அதன்பிறகு வந்த அன்லிமிடெட் வீடியோ வசதியால் பலர் யூடியூப்களை பார்க்க தொடங்கினார்கள். பேஸ்புக்கில்லும், இன்ஸ்டாகிராமிலும் வீடியோக்களை அதிகமாக பார்க்க தொடக்கினார்கள்.

இதனால் நிறைய யூடியூபர்கள், இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர்கள் உருவானார்கள். அவர்கள் மக்களின் கவனத்தை பெற பல வித்தியாசமான செயல்களை செய்கிறார்கள். காடுகளை சுற்றுவது, உணவகங்களை சுற்றுவது, சாப்பாடுகளை சமைத்து வீடியோ போடுவது, அன்றாடம் வீட்டில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக போடுவது, பிடித்த பாடல்களை ரீகிரியேட் செய்து டிக்டாக் வீடியோ போடுவது என பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதில் பல யூடியூபர்கள் லட்சங்களை குவிக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த 4 வருடங்களில் யூடியூபர்கள் தொழில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

அதேநேரம் யூடியூபர்கள் மக்களின் கவனத்தை பெறுவதற்காக தவறான வழிகளையும் தேர்வு செய்கிறார்கள்.மக்களை பயமுறுத்துவது, சாலைகளில் நடந்து செல்வோரை கன்டெண்ட் ஆக மாற்றுவது, பெண்களிடம் விபரீதமான கேள்விகளை கேட்பது என பல சேட்டைகள் செய்கிறார்கள். சிலர் ஏழைகளை தேடி சென்று உதவி செய்து வீடியோவும் போட்டு சம்பாதிக்கிறார்கள்.
இப்படி ஏழைகளை தேடி சென்று பண உதவி செய்து பிரபலம் ஆவது ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகம் நடக்கிறது. அதேநேரம் சில யூடியூபர்கள் இன்னும் கொஞ்சம் ஓவராக போய் நடுரோட்டில் பணத்தை வானத்தை நோக்கி வீசுகிறார்கள். அதனை மக்கள் ஓடிச்சென்று எடுப்பதை வீடியோ எடுத்து போடுகிறார்கள். இப்படி முக்கியமான சில யூடியூபர்கள் அடிக்கடி செய்கிறார்கள்.
அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் யூடியூபர் ஒருவர் பணத்தை காற்றில் வீசும் வீடியோ வெளியாகியது. இது தான் ஹைதராபாத் நெட்டிசன்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. ஆன்லைனில் "இட்ஸ்_மீ_பவர்" என்று அழைக்கப்படும் பவர் ஹர்ஷா என அழைக்கப்படும் யூடியூபர், கரன்சி நோட்டுகளின் கட்டுக்களை வானத்தை நோக்கி வீசுகிறார். இதனால் மக்கள் பணத்தைப் பிடிக்க விரைந்து ஓடினார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் விபத்து அபாயமும் ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் செல்வாக்கைப் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட இந்த ஸ்டண்ட்டுகளுக்கு, நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்படி செயல்படுவோருக்கு எதிராக ஹைதராபாத் மற்றும் சைபராபாத் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சைபராபாத் காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications