விலை உயர்வு பிரச்சனையால் லோக்சபாவில் அமளி: முதல் நாளே அவை ஸ்தம்பிப்பு- நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. அவை துவங்கியதும் விலை உயர்வு பிரச்சனையை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு கடந்த மாதம் 4ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார், சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டாரர்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார். அதன் பிறகு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

பட்ஜெட்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. வரும் 8ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார்.

பொது பட்ஜெட்
9ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். வரும் 10ம் தேதி அவர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

ஆகஸ்ட்
இன்று துவங்கியுள்ள இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி
இன்று அவை துவங்கியதும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து, கெய்ல் விபத்து, டெல்லி கட்டட விபத்து, சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து ஆகியவற்றில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோஷம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு குறித்து பிரச்சனையை எழுப்பி எதிர்கட்சியினர் கோஷமிட்டனர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு
நண்பகல் 12 மணிக்கு அவை கூடியதும் மறுபடியும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.

நாள் முழுவதும்
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியது. விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சியினரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இருப்பினும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications