தெலுங்கானா - சட்டீஸ்கர் எல்லையில் 10 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி
தெலுங்கானா - சட்டீஸ்கர் மாநில எல்லையில் 10 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கானா - சட்டீஸ்கர் மாநில எல்லைப்பகுதியான செர்லா என்னுமிடத்தில் இரு மாநில பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 10 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா - சட்டீஸ்கர் மாநில எல்லைப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து இருப்பதாக உளவுத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று காலை எல்லைப்பகுதியான செர்லா என்னுமிடத்தில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்தத் தாக்குதலில் 10 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பலியாகினர். இதில் தெலுங்கானா மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான ஹரி பூஷன் என்பவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்ததாகவும் அவரை ஹெலிக்காப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, இந்தத் தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என்றும், ஏற்கனவே அவர்களை பிடித்து வைத்து இன்று காட்டில் வைத்து சுட்டுக்கொன்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications