சவுதி எண்ணெய் நிறுவன குடியிருப்பில் பயங்கர தீவிபத்து - 11 பேர் பலி; 219 பேர் படுகாயம்!
ஜெட்டா: சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவன தொழிலாளர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் கம்பெனி, கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகிலேயே பெரிய நிறுவனம் ஆகும்.
அதன் தொழிலாளர்கள் குடியிருப்பு அல் கோபார் நகரில் உள்ளது. அதில் எட்டு 6 மாடி குடியிருப்புகள் உள்ளன. அதில் ஒரு குடியிருப்பின் தரைத்தளத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.45 மணிக்கு திடீரென தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் மற்ற குடியிருப்புகளுக்கும் பரவ தொடங்கியது.
அதிகாலை நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தீ விபத்தினால் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். உயிர் பிழைப்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த கோர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 219 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து பற்றி அந்த பகுதியை சேர்ந்த முகமது சித்திக் என்ற பொறியாளர் கூறும்போது, ‘‘காலை 6 மணிக்கு தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து பெரும்புகை வெளியானதை பார்த்தேன். அங்கு 30 ஆம்புலன்ஸ்களும், 3 ஹெலிகாப்டர்களும் வந்ததை பார்த்தேன். அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது'' என்றார்.
தீ எரிந்து கொண்டிருந்தபோது பலரும் உயிர் பிழைப்பதற்காக கட்டிடங்களின் மேல் தளத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். பலியானவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. சவுதி அரம்கோ எண்ணெய் கம்பெனியில் 77 நாடுகளை சேர்ந்த 61 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை சவுதியில் முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications