11 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. ஒடிசாவில் இருந்து தமிழக ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்! பரபர!
புவனேஸ்வர் : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழ்நாடு அரசின் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 291 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று நிறைவு பெற்று, பின்னர் ரயில்வே சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.

ஒடிசாவில் தமிழ்நாடு டீம் : இதற்கிடையே நேற்று காலை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 பேர் ஒடிசா சென்றனர்.
விபத்தில் சிக்கியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், அவர்களை தமிழ்நாட்டுக்கு மீட்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த குழுவினர் ஒடிசா சென்றனர்.
அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணிகளை கண்காணித்து உதவி வந்தனர். மற்றொரு குழுவான ஐஏஎஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்து வந்தனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த தமிழர்கள் 11 பேரை தொடர்புகொள்ள இயவில்லை என ஒடிசாவில் உள்ள தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
தற்போது வரை உயிரிழந்த 296 பேரில் 160 பேரின் அடையாளம் தெரியவரவில்லை. அதே நேரம் 11 தமிழ்நாட்டு குடும்பத்தினர் போட்டோக்களுடன் அவர்களது உறவினர்களை தேடி வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்க இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு அரசுக் குழுவினர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
ரயில் விபத்தால் ஒடிசாவில் சிக்கி தவித்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக, ரயில்வேசார்பில் ஒடிசாவின் பாத்ரக்கில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் 294 பேர் வந்த நிலையில், பலர் அவரவர் சொந்த ஊர்களில் இறங்கிவிட்டதால், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 133 பேர் வந்தடைந்தனர். ரயில் நிலையத்தில் காத்திருந்த மருத்துவ குழுவினர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர், எழும்பு முறிவு உள்பட காயமடைந்த 8 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்தில் சிக்கிய தமிழர்களை முழுமையாக கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications