கொல்கத்தாவில் ரூ.100 கேட்டு சீனியர்கள் தாக்கியதில் 11 வயது மாணவி பலி
கொல்கத்தா: சீனியர்கள் தாக்கியதில் காயமடைந்த கொல்கத்தா பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கோபமடைந்த அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 11 வயது மாணவி இண்டிரில்லா தாஸ். அவரது பள்ளியில் மூத்த வகுப்பில் படித்து வரும் சில சீனியர் மாணவிகள் இண்ட்ரில்லாவிடம் ரூ100 கேட்டு நச்சரித்து வந்துள்ளனர்.
ஆனால், அதனை தர அவர் மறுத்து விட்டதால், கடந்த வாரம் அவரை கழிவறை ஒன்றில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழிவறைக்குள் சிக்கி தவித்திருக்கிறார் இண்டிரில்லா.
இந்த சம்பவத்திற்குப் பிறகும், தொடர்ந்து இண்ட்ரில்லாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர் சீனியர் மாணவிகள். ஒரு கட்டத்தில், கோபத்தில் இண்ட்ரில்லாவைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அம்மாணவி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மகளை இழந்த துக்கத்தில் கோபத்துடன் பள்ளியை முற்றுகையிட்டனர் இண்ட்ரில்லாவின் பெற்றோர். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்குள் அவர்களது உறவினர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்களை அடித்து துவம்சம் செய்தனர்.
ஆனால், நடந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசில் புகார் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications