காஷ்மீரில் வேன் கவிழ்ந்து கோர விபத்து- 15 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
உதம்பூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்தி என்ற பகுதியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், தல்சார் என்ற பகுதியில் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வேனில், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் இருந்ததாகவும், அதிகப்படியாக ஆட்களை ஏற்றிச் சென்றதாலே விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 8 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்தவர்கள் உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கும், பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.