அதிர்ச்சியின் உச்சம்! 12 வயசுதான் ஆச்சு.. திடீரென சரிந்த சிறுவன்! மாரடைப்பால் பரிதாபமாக பறிபோன உயிர்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 12 வயதே ஆன சிறுவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 20களில் இருக்கும் மற்ற இருவரும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் திடீர் திடீரென ஏற்படும் மாரடைப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இதுபோன்ற பாதிப்புகள் கணிசமாகவே அதிகரித்துள்ளது. அப்படி தான் இப்போது குஜராத்தில் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

தேவபூமி துவாரகா என்ற பகுதியில் அமைந்துள்ள விஜாப்பூர் கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் படித்த வந்த 12 வயது சிறுவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். சிறுவனின் திடீர் மரணம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
12 வயது சிறுவன்: 6ஆம் வகுப்பு படித்து வந்த துஷ்யந்த் பிப்ரோதர் என்ற அந்த சிறுவன் அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த அந்த சிறுவனின் தந்தை கூறுகையில், "எனது தாய் எப்போதும் காலை அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். அப்படி எழுந்த போது தான், வீட்டில் முற்றத்தில் எனது மகன் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தூக்கத்தில் அங்குப் படுத்திருப்பான் என எண்ணி.. அவனை பெட்ரூமிற்கு அழைத்து வர அருகே சென்றுள்ளார். இருப்பினும், அருகே சென்ற போது அவன் மூச்சுவிடவில்லை என்பதை உணர்ந்தார்.
பரிதாபமாகப் பலி: உடனடியாக அவர் எங்களுக்கு இது குறித்துத் தெரியப்படுத்தினார். நாங்கள் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இருப்பினும், மருத்துவமனையில் எனது மகனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்" என்று தெரிவித்தார். அவரது மகன் கொரோனா வேக்சின் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த சிறுவன் படித்த பள்ளியின் முதல்வர் கூறுகையில், "மாணவரின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமமும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவரது மறைவுக்குப் பள்ளியிலும் இரங்கல் செலுத்தினோம்" என்று அவர் தெரிவித்தார். இந்த ஒரு சம்பவம் மட்டுமின்றி குஜராத்தில் அங்கே மேலும் இரண்டு இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
நடுரோட்டில் பலி: அதேபோல ராஜ்கோட்டில் 23 வயதான நிமித் சத்ரானி நடுரோட்டில் நெஞ்சு வலியால் சரிந்துள்ளார். பல மாதங்களாக வேலை தேடி வந்த சத்ராணி, நேர்காணலில் பங்கேற்ற சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் சாஸ்திரிநகர்-அஜ்மீரா பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது நெஞ்சு வலியால் சரிந்தார்.. அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவர்கள் மாரடைப்பு என்றே கூறியுள்ளனர். இருப்பினும், இது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார்.
பூஜை செய்யும் போது மரணம்: அதேபோல மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக 24 வயதான ஜாஸ்மின் வகாசியா என்பவர் அவரது உறவினரின் தொழிற்சாலையில் உயிரிழந்தார். காலை 7 மணியளவில் பூஜை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். நாடு முழுக்க இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications