மணல் லாரியை விரட்டிய போலீஸ்.. தாறுமாறாக ஓடி பஸ்ஸுடன் மோதல்.. 13 பேர் பரிதாப பலி!
கோலார், கர்நாடகா: கர்நாடக மாநிலம் கோலாரில் மணல் கடத்திய லாரியை போலீஸார் துரத்திச் சென்றபோது அந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தும்கூரிலிருந்து ஒரு அரசுப் பேருந்து 50 பயணிகளுடன் திருப்பதிக்குப் போய்க் கொண்டிருந்தது. இந்தப் பேருந்து கோலார் அருகே முல்பாகல் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு மணல் லாரி ஆந்திராவிலிருந்து படு வேகமாக வந்து கொண்டிருந்தது. அதை போலீஸ் குழு ஒன்று பின்னால் வேனில் துரத்தி வந்தது.
அப்போது அந்த லாரி படு வேகமாக அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதத்தைச் சந்தித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்து போனார்கள். மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.