சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழை.. பலி 14ஆக உயர்வு! 102 பேர் மாயம்
கேங்டாக்: வடக்கு சிக்கிமில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11ஆக அதிகரித்துள்ளது. அதேபோல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 23 ராணுவ வீரர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றையொட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆற்றை ஒட்டிய சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இது குறித்து மாநில பேரிடர் ஆணையம் கூறுகையில், "மாங்கன் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மழை பெய்திருக்கிறது. இதுவே டீஸ்டா நதிப் படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாகும். எனவே இந்த நதியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். சுங்தாங்கில் உள்ள ஏரி உடைந்ததால் தற்போது நதியின் நீர் மட்டம் தொடர்ந்து வருகிறது. எனவே கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வெண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் முதல், நேற்று வரை தெற்கு சிக்கிமில் உள்ள நம்ச்சி மற்றும் நாம்தாங் ஆகிய இடங்களில் முறையே 98.0மிமீ மற்றும் 90.5மிமீ மழை பெய்துள்ளது. மேலும் 3-4 நாட்களுக்கு இந்த பகுதியில் மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாமை வெள்ளம் தாக்கியதால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அதேபோல 79 பொதுமக்களையும் காணவில்லை. இவர் அனைவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரேயொரு வீரர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் உடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடியுள்ளார். அப்போது, வெள்ள பாதிப்பிலிருந்து மீள தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications