ராஜஸ்தானில் கொடூரம்! 14 வயது சிறுமியை காரில் அழைத்துச் சென்று.. ஏழு பேர் கூட்டு பலாத்காரம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் பலாத்காரம் போன்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
குறிப்பாக, சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளாகப் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

14 வயது சிறுமி
அப்படியொரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள பாரி என்ற பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 6 முதல் 7 பேர் அந்தச் சிறுமியைக் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கூட்டுப் பலாத்காரம்
இது குறித்துப் பாரி போலீஸ் அதிகாரி மனிஷ் சர்மா கூறுகையில், "தோல்பூரில் உள்ள பாரியில் 14 வயது சிறுமி 6-7 ஆண்களால் ஒரே இரவில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நடுத்தர வயதுடைய நபர் அந்த சிறுமியை முதலில் பைக்கில் அருகே இருக்கும் சுங்கச்சாவடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் அங்கிருந்து 6-7 ஆண்கள் அவளை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து உள்ளனர்.

தனிப்படைகள்
இந்தச் சம்பவத்தில் முதற்கட்டமாக மூன்று பேரைக் கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதில் குற்றவாளிகளைப் பிடிக்கத் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மற்ற குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். மிக விரைவிலேயே மற்ற குற்றவாளிகளையும் பிடித்து விடுவோம்" என்றார்.

என்ன நடந்தது
மேலும், இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அவர், " அந்தச் சிறுமி ஜூலை 26ஆம் தேதி மார்கெட் பகுதிக்குச் சென்று இருந்தார். அங்கு நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் சிறுமியை மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றார். சுங்கச்சாவடி அருகே, அந்த சிறுமியை வேறு ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். அங்கு இரவு முழுவதும் அந்த சிறுமியை 6-7 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இரவு வீடு திரும்பவில்லை
சிறுமி இரவு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் மார்கெட் பகுதி முழுவதும் தேடி உள்ளனர். மறுநாள் காலையில் அந்தச் சிறுமியை அவரது பெற்றோர், ஒரு கோயிலுக்கு அருகே நின்று கொண்டு இருந்ததைக் கண்டறிந்தனர். அப்போது தான் அந்தச் சிறுமியை அழுது கொண்டே தனக்கு என்ன நடந்தது என்பதைப் பகிர்ந்து உள்ளார். அதன் பின்னரே சிறுமியின் பெற்றோர், புகார் அளித்தனர்" என்றார்.












Click it and Unblock the Notifications