வயல் பக்கம் ஒதுங்கிய சிறுமியை கடத்திப் போய் பலாத்காரம் செய்த கயவர்கள் கைது
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் காலை கடன் கழிக்க வயல் பக்கம் ஒதுங்கிய 15 வயது சிறுமியை கடத்திச் சென்று நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த 2 கொடூரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
இயற்கை உபாதைகளை கழிக்க வீட்டுக்கு வெளியே போகாதீர்கள் கழிவறைகளை கட்டுங்கள் என்று தொலைக்காட்சிகளில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் எண்ணற்ற கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டவிடவில்லை.
உ.பி மாநிலத்தில் காலை கடன் கழிக்க வயல்வெளிகளில் ஒதுங்கும் சிறுமிகள்தான் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். இதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
முசாபர்நகர் மாவட்டம், திண்ட்வாலி கிராமத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி கடந்த 26-ஆம் தேதி அதிகாலை தூங்கி எழுந்து, காலை கடன் கழிப்பதற்காக வயல்காட்டுக்கு சென்றாள். அப்போது, அங்கு ஒளிந்திருந்த நான்கு வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவளை கடத்திச்சென்று அதே கிராமத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
அங்கு அந்த நான்கு காமூகர்களும் மாறி, மாறி அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர். அவளை வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்து வெளியே சென்றுவிட்டு வந்து மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர். நான்கு நாட்களாக அந்த கும்பலிடம் கொடுமை அனுபவித்த சிறுமி, நேற்று அந்த வீட்டில் இருந்து தப்பியோடினாள். நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே கூறினாள்.
சிறுமியை காணாமல் தேடி அலைந்த குடும்பத்தினர். மகள் கிடைத்தும் அவர்களால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. மகள் சீரழிக்கப்பட்டதை போலீசில் புகார் கொடுத்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து முகேஷ் மற்றும் பிரதீப் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான இரண்டுபேரை தேடி வருகின்றனர்.