துப்புக் கொடுத்ததாக கூறி 16 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற அசாம் தீவிரவாதிகள்!
இந்தியா-பூடான் எல்லையில் உள்ள திவிமக்ரி என்ற கிராமத்தில் 16 வயது சிறுமியை கடந்த 20 ஆம் தேதி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படைக்கு சிறுமி தகவல் தெரிவித்ததாக குற்றம் சாட்டி சிறுமியை தீவிரவாதிகள் அவரது பெற்றோர் முன்னிலையில் 9 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
சிறுமி பொதுமக்கள் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததார். முன்னதாக சிறுமியை தீவிரவாதிகள் கொடுமையாக தாக்கியுள்ளனர். சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிப்பவராக செயல்பட்டதால் அவர் கொல்லப்பட்டார் என்றும் இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்றும் தீவிரவாதிகள் கூறியுள்ளன.
சமீபத்தில் அங்கு பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்குள் நுழைந்து நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 5 போடோ தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் தகவல் கொடுத்த சிறுமியை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.