மும்பை: உறியடித் திருவிழாவில் கீழே விழுந்து 17 பேர் காயம்- ஒருவர் கவலைக்கிடம்
மும்பை: ஜென்மாஷ்டமியை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற உறியடித் திருவிழாவில் தவறிக் கீழே விழுந்ததில் 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தாஹி ஹந்தி எனப்படும் உறியடி திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. ஆடம்பரமாக கொண்டாடப்படும் இந்த கேளிக்கைத் திருவிழாவில் உயரமாக கட்டப்பட்டுள்ள ஒரு பாத்திரத்தில் வெண்ணையுடன் பரிசுப்பொருட்கள் இருக்கும். பிரமிடு போன்று இளைஞர்கள் ஒருவர்மீது ஒருவர் ஏறி நின்று அந்த பாத்திரத்தில் உள்ள பரிசுப்பொருட்களை எடுப்பார்கள்.

அந்தவகையில் இன்று மும்பையில் நடந்த உறியடி திருவிழாவில் கீழே தவறி விழுந்ததில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சியோன் மற்றும் கே.இ.எம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கே.இ.எம். மருத்துவமனை டீன் கூறும்போது ‘‘உறியடி விழாவில் கலந்துகொண்டபோது கீழே விழுந்து அடிபட்டதாக 12 பேர் இந்த ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக வந்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
அதேபோல், சீயோன் மருத்துவமனை டீன் கூறுகையில், '5 பேர் சீயோன் மருத்துவமனைக்கு வந்தார்கள். அவர்களிடம் 3 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டார்கள். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது'' என்றார்.
முன்னதாக இந்த விழாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், பின்னர் உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications